என்னது டீ குடித்தவரை தூக்கி உள்ளே வெச்சீங்களா? போலீசுக்கு மும்பை கோர்ட் செம டோஸ்!
மும்பை: டீ குடித்துக் கொண்டிருந்தவரை சந்தேகப்பட்டு தூக்கி உள்ளே வைத்த போலீசாருக்கு மும்பை உயர்நீதிமன்றம் செம டோஸ் விட்டிருக்கிறது.
மும்பை ராஜராம்புரி சிவாஜி பல்கலைக் கழகம் அருகே கோல்ஹாப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் 22- ந் தேதி முற்பகல் 11 மணிக்கு விஜய் பாட்டீல் என்பவர் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற போலீஸ்காரர் ஒருவருக்கு அவர் மீது திடீரென சந்தேகம் வந்தது.
இதனால் பாட்டீலிடம் போய் அந்த போலீஸ்காரர் போய் விசாரித்திருக்கிறார். அப்போது விஜய் பாட்டீலும் சிலபல காரணங்களை சொல்லியிருக்கிறார். ஆனாலும் விசாரித்த போலீஸ்காரருக்கு திருப்தி அளிக்கவில்லை.

சந்தேகத்துடன் டீ குடித்ததால் கைது
உடனே ஐபிசி 151வது பிரிவின் கீழ் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்து கொண்டதாகக் கூறி பாட்டீலை கைது செய்து உள்ளே வைத்துவிட்டார். பின்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட நன்னடத்தை சான்றிதழைத் தாக்கல் செய்ய கோர்ட்டும் உத்தரவிட்டது.

கோர்ட் படியேறினார் 'சந்தேக நபர்'
இந்த விவகாரத்தை விஜய் பாட்டீல் சும்மா விடவில்லை. தம்மை சட்டவிரோதமாக கைது செய்ததற்காக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிட்டார்.

அதிர்ந்த மும்பை ஹை கோர்ட்
விஜய் பாட்டீல் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிர்ந்து போயினர். அடப்பாவிகளா! ஒரு டீ குடித்ததற்காக கைது செய்வதாக என்று கொந்தளித்தும் போய்விட்டனர்.

டீ குடிக்க காரணமா?
மேலும் "இது மிக மோசமான வழக்கு. டீ குடிப்பதற்கு காரணம் கூற வேண்டும் என்று நமது சட்டத்தில் எங்கேனும் கூறப்பட்டிருக்கிறதா? அது காலையாக இருந்தால் என்ன மாலையாக இருந்தால் என்ன இல்லை இரவாகக் கூட இருந்தால் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

மோசமான கிரிமினல்
அப்போதும் போலீசார் தரப்பு விடுவதாக இல்லை.. பல குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர் அவர்.. அவர் இதர குற்றங்களில் ஈடுபடுவதற்கு முன்பாகவே சந்தேகத்தை தூண்டும் வகையில் டீ குடித்துக் கொண்டிருந்ததால் கைது செய்யப்பட்டார் என்று விளக்கம் அளித்தனர்.

டீ குடிக்கும் வகைகள்
இதைக் கேட்ட நீதிபதி, டீ குடிப்பதில் எத்தனையோ வகை உள்ளது. சிலர் அதிக சத்தம் போட்டு டீ குடிப்பார்கள். அதற்கெல்லாம் கைது செய்து விட முடியாது. 'சந்தேகத்துக்கு இடமான' வகையில் டீ குடிப்பது எப்படி? டீ குடிப்பதை சட்டம் அனுமதிக்கிறது என்றும் கூறி போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள்
மேலும் விஜய் பாட்டீல் மீது போலீசார் சொல்லும் 113 வழக்குகளில் பெரும்பாலானாவை சூதாட்ட வழக்குகள் தொடர்பானவை. பல வழக்குகளில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வழக்கில் கூட தண்டிக்கப்படவில்லை. இதனால் போலீஸ் நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது என்று சாடினர்.












Click it and Unblock the Notifications