மே.வங்கம்: பாஜக எம்.பி. வீடு மீது நாட்டு வெடிகுண்டுகள் சரமாரி வீச்சு-துப்பாக்கிச் சூடு
பார்ரக்பூர்: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி. அர்ஜூன் சிங் வீடு மீது மர்ம நபர்கள் சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகள் வீசியுள்ளனர். மேலும் அவர் வீடு மீது துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பார்ரக்பூரின் மஸ்தூர் பவனில் அர்ஜூன் சிங் வீடு உள்ளது. இங்கு நேற்று இரவு 9 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசியது. பின்னர் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக அர்ஜூன் சிங் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவி எம்.பியானவர் அர்ஜூன்சிங்.
இதனால் இத்தாக்குதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்பிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்த அக்கட்சித் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார்.
கடந்த ஜூன் மாதம் இதே வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பத்பாரா என்ற பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையேயான மோதல் நடைபெற்றது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications