ஜம்முவில் மீட்கப்பட்ட 3 பசுக்களின் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை... பலி தரப்படவில்லை என போலீஸ் தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 3 பசுக்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த பசுக்கள் பலி கொடுக்கப்படவில்லை, விஷ உணவால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அதனால் மாட்டிறைச்சி விற்பனைக்கான தடை உத்தரவை 2 மாத காலம் நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இது தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், இந்த மாட்டிறைச்சி விவகாரத்தை முன்வைத்து வீண் வதந்திகள் கிளம்பி பதட்டத்தை ஏற்படுத்தி வந்தன. ஏற்கனவே, உத்திரப்பிரதேச மாநிலத்தில் பசுவை பலியிட்டதாக இக்லாக் என்ற முதியவரும், அவரது மகனும் கும்பலால் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதில், இக்லாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் செனானி தாலுகாவில் 3 பசுக்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. அவை பலி கொடுக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து வீண் வதந்திகளால் வன்முறை சம்பவங்கள் நிகழாத வகையில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் உடனடியாக இணையசேவைகள் முடக்கப்பட்டன. வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை என உறுதியாகும் வரை இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என அம்மாநில போலீசார் அறிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்று பசுக்களின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், கால்நடை மருத்துவர்கள் கொண்டு அதற்கு பிரேத பரிசோதனை நடத்தினர். அதில், அந்த 3 பசுக்களும் விஷ உணவைச் சாப்பிட்டு உயிரிழந்ததாகவும், அவை பலி கொடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக உதாம்பூர் எஸ்எஸ்பி முகமது சுலைமான் சவுத்ரி கூறுகையில், "உதாம்பூர் மாவட்டம் செனானி தாலுகாவில் சப்-டிவிஷ்னல் மாஜிஸ்திரேட் அலுவலகத்திற்கு பின்புறமாக படுகொலை செய்யப்பட்ட 3 பசுக்களில் சடலங்கள் மீட்கப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவை பலி கொடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. அவற்றின் கழுத்தில் கூர் ஆயுதங்களால் தாக்கிய தடயம் எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விஷ உணவு சாப்பிட்டதாலேயே பசுக்கள் உயிரிழந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது. பசுக்களின் உடல்கள் மீட்கப்பட்ட பகுதியில் சில காகங்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. எனவே, அவை அனைத்தும் விஷ உணவு எதையாவது சாப்பிட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, மக்கள் அமைதி காக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியதற்காக சுயேட்சை எம்.எல்.ஏ.வை பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் சட்டபேரவைக்குள்ளையே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த 3 பசுக்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் வெளியானதால் அங்கு பெரும் பதட்டமான சூழல் உருவானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications