ஆங்கிலத்தில் பேசாத 6 வயது மாணவனின் தலையை சுவரில் மோதிய ஆசிரியை.. மாணவன் பலி
நல்கொண்டா: தெலுங்கானாவில் ஆங்கிலத்தில் பேசாததால் 6 வயது மாணவனின் தலையை ஆசிரியை சுவரில் முட்டியதில் அவர் பரிதாபமாக பலியானார்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி கிராமத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராமாவத் சந்து(6) ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். விவசாயியின் மகனான சந்து கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் வகுப்பறையில் ஆங்கிலத்தில் பேசாமல் தெலுங்கில் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை சுமதி சிறுவனை அடித்ததுடன் அவரது தலையை சுவற்றில் மோதியுள்ளார். சுவரில் நீட்டிக் கொண்டிருந்த ஆணியில் சிறுவனின் தலை பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டது. வீட்டுக்கு சென்ற சிறுவனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை உடனே ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மறுநாள் காலை சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த சந்துவின் உறவினர்களும், பொது மக்களும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரை கைது செய்யக் கோரி பள்ளிக்கூட வாசலில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆசிரியை அடித்ததால் சிறுவன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications