நாடாளுமன்றத்தில் தப்பு தப்பாக தகவல் கொடுத்தாரா ஸ்மிருதி இரானி? உரிமை மீறலுக்கு நோட்டீஸ்
டெல்லி: நாடாளுமன்றத்திற்கு தவறான தகவலை கொடுத்ததாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக உரிமைமீறல் பிரச்சினை கிளப்புவதற்கு, அனுமதி கேட்டு, லோக்சபா சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளார் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை தலைவர் முகமது சலிம்.
"பிப்ரவரி 24ம் தேதி, மக்களவையில் ஸ்மிருதி இரானி, ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் குறித்து வழங்கிய தகவல்கள் பொய்யானவை. ஒரு அமைச்சராக இருப்பவர் அவைக்கு பொய் தகவல்களை தந்துவிட்டார்.

இரானியின் தகவல்கள் பொய்யானவை என்பதால், இது அவை உறுப்பினர்களின் உரிமைகளை மதிக்காத செயலாகும். எனவே இரானி மீது உரிமைமீறல் பிரச்சினை கிளப்ப அனுமதிக்க வேண்டும்" என்று அந்த நோட்டீசில் முகமது சலிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜே.என்.,யூ பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷம் எழுப்பப்பட்டதாக இரானி கூறிய வீடியோ ஆதாரம் பொய் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஹைதராபாத் மாணவர் ரோகித் வெமுலா, தற்கொலை செய்த தகவல் கிடைத்ததும், அவரின் அருகே டாக்டரையோ, போலீசாரையோ செல்ல விடாமல் தடுத்து அரசியல் செய்யப்பட்டதாக இரானி கூறியதும் பொய். தகவல் அறிந்த 5வது நிமிடத்தில் டாக்டர் வெமுலா உடலை பரிசோதித்த ஆதாரம் உள்ளது. போலீசாரும் உடனிருந்துள்ளனர். இவ்வாறு சபாநாயகரிடம் வழங்கப்பட்ட நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜே.என்.யூ வளாகத்தில் சர்ச்சைக்குறிய நேரத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் 7 வீடியோ காட்சிகளை, டெல்லி ஆய்வகத்தில், ஆய்வு செய்து பார்த்ததில் அதில் 2 ஜோடிக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. மற்ற 5 வீடியோக்களும் ஜோடிக்கப்படாதவையாகும். ஜோடிக்கப்பட்ட வீடியோக்களில், வீடியோவில் இல்லாதோர் பேசுவதை போல ஒலி சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications