அடுத்த தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவளிக்க மாட்டேன்.. பாபா ராம்தேவ் திடீர் பல்டி.. என்ன காரணம்?
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று யோகா குரு பாபா ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று யோகா குரு பாபா ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக கட்சிக்கு மிகவும் நெருக்கமான சாமியார்களில் பதஞ்சலி நிறுவனர் யோகா குரு பாபா ராம்தேவும் ஒருவர். பாஜக இவரை ஹரியானா மாநிலத்தின் தூதுவராக நியமித்தது.
இவருக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர் பாஜகவிற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
பிரச்சாரம்
அவர், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன். நான் ஏன் செய்ய வேண்டும். நான் அரசியலில் இருந்து விலகிவிட்டேன். எந்த கட்சிக்கும் அடுத்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய மாட்டேன். நான் இப்போது பாஜகவுடன் மட்டுமல்ல எந்த கட்சியுடனும் அவ்வளவு நெருக்கத்தில் இல்லை என்றுள்ளார்.
பசுக்கள்
மேலும், இப்போது பலர் மாடுகளை வைத்து அரசியல் செய்கிறார்கள். பசுக்களை இந்து மதத்திற்குள் திணிக்க பார்க்கிறார்கள். பசுக்களுக்கு மதம் கிடையாது. அதை வைத்து வன்முறை செய்ய கூடாது என்றுள்ளார். நான் ஒரு அறிவியல் சார்ந்த யோகா குரு அவ்வளவுதான். நான் மதகுரு கிடையாது, என்றுள்ளார்.
பெட்ரோல் விலை
அதோடு, அரசு பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். அரசு தனது கூடுதல் வரியை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக வரியை மக்களிடம் வசூலிக்க கூடாது. வேண்டுமானால் பணக்காரர்களிடம் வரி வசூலிக்கலாம். என்னிடம் கேட்டால், நான் பெட்ரோலை 35 ரூபாய்க்கு கொடுக்க வழி சொல்வேன், என்றுள்ளார்.
உரிமை
கடைசியாக, பிரதமர் மோடி ஆட்சி நன்றாகவே செய்துள்ளார். பெரிய ஊழல் எதுவும் செய்யவில்லை. ஆமாம் ரஃபேல் குறித்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனாலும் பெரிய பிரச்சனை இல்லை. அவரை மக்கள் விமர்சிக்கலாம். அவரை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உள்ளது, என்றுள்ளார்.