உத்தராகண்ட் பரிதாபம்.. காங்கிரஸ் வோட்டை பிரித்தது எந்த கட்சி தெரியுமா? தோல்விக்கு முக்கிய காரணம்
டேராடூன்: உத்தராகண்ட் மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தம் 70 இடங்கள் இருக்கும் நிலையில், ஒரு கட்சி ஆட்சியை அமைக்கக் குறைந்தது 41 இடங்களில் வெல்ல வேண்டும்.

உத்தராகண்ட்
புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி இப்போது அங்கு நடந்து வருகிறது. கடந்த 2017 தேர்தலில் அங்கு 57 இடங்களில் வென்று பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. முதலில் உத்தராகண்ட் முதல்வராக இருந்தவர் திரிவேந்திர சிங் ராவத். அவரது செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் தீரத் சிங் ராவத் முதல்வராக்கப்பட்டார். அவர் மீதும் அதிருப்தி ஏற்பட்ட நிலையிலேயே, கடந்த 2021 ஜூலை மாதம் புஷ்கர் சிங் தாமி உத்தராகண்ட் முதல்வராகக் கொண்டுவரப்பட்டார்.

காங்கிரஸ் நம்பிக்கை
முதல்வர்களை மாற்றுவது பாஜகவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதையே காட்டுவதாக இருந்ததாக நம்பியது காங்கிரஸ். இத்துடன் கொரோனா பரவல், கும்பமேளா குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை காரணமாக உத்தராகண்ட் மக்கள் ஆளும் பாஜகவுக்கு எதிராக இருப்பதாகவே காங்கிரஸ் கருதியது. உத்தராகண்ட் காங்கிரஸ் மூத்த தலைவரான ஹரிஸ் ராவத் கூட உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைக்கப்போவது உறுதி என்றே இன்று காலை வரை கூறி வந்தார்.

நம்பிக்கை பொய்த்தது
இருப்பினும், இதுவரை அங்கு வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே உள்ளது. அங்குத் தனிப் பெரும்பான்மைக்கு ஒரு கட்சி குறைந்தது 41 இடங்களில் வெல்ல வேண்டும். தற்போதைய சூழலில் பாஜக 44 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இரு கட்சிகளுக்குப் பின்னர் பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும் சுயேச்சைகள் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

வாக்கு சதவிகிதம்
உத்தராகண்ட் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் என அக்கட்சித் தலைவர்கள் நம்பிய போதிலும், அது நடக்கவில்லை. இதற்கான காரணத்தை வாக்கு சதவீதத்தைப் பார்க்கும் போது நமக்குத் தெளிவாகப் புரியும். உத்தராகண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக அதிகபட்சமாக 44% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்து காங்கிரஸ் கட்சி 39% வாக்குகளைப் பெற்றுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே சுமார் 5% வாக்கு வித்தியாசம் உள்ளது.

என்ன காரணம்
மற்ற கட்சிகளின் வாக்கு சேவிதத்தைப் பார்க்கும் போது காங்கிரஸ் ஏன் தோல்வி அடைந்தது என்பது புரியும். பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கிய பகுஜன் சமாஜ் கட்சி சுமார் 4.5% வாக்குகளைத் தன்வசப்படுத்தி உள்ளது. இந்த 4.5% வாக்குகள் தான் பல இடங்களில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான வெற்றி தோல்வியைத் தீர்மானித்துள்ளது. அதேபோல ஆம் ஆத்மி பெற்ற 3.5% சதவிகித வாக்குகளும் எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரித்துள்ளது.
Recommended Video

அந்த 4.5% வாக்குகள்
தேர்தலுக்குப் பின் வந்த பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் உத்தராகண்ட் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டது. ஆனால், அதைப் பொய்யாக்கும் வகையில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜக எளிதாகப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தராகண்ட்டில் பகுஜன் சமாஜ் பிரித்த அந்த 4.5% வாக்குகளே பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications