ஒரு கட்சியையும் விடுவதாக இல்லை-சமாஜ்வாதியை உடைத்தது பாஜக-எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் திடீர் ராஜினாமா
லக்னோ: நாட்டில் பலமாக உள்ள கட்சிகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்றுவதில் படுவேகமாக இருக்கிறது பாஜக. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் 3 எம்.எல்.சிக்கள், 3 எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துள்ளது.
பல மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை உடைத்து பாஜக தம்மை வலுவாக்கிக் கொண்டு வருகிறது. இதே பாணியில் ஆட்சியையும் கைப்பற்றி வருகிறது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தள் கூட்டணியை உடைத்தது பாஜக. தற்போது ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியில் பங்கேற்றுள்ளது பாஜக.

குஜராத்
குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலில் சோனியா காந்தியின் ஆலோசகர் அகமது படேலை வீழ்த்த எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு வருகிறது பாஜக. இதனால் அம்மாநில எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகாவுக்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி
புதுச்சேரியிலும் ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. என்.ஆர்.காங்கிரஸ்- அதிமுக- அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உதவியுடன் பாஜகவின் பினாமி ஆட்சியை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

தமிழகம்
தமிழகத்தில் ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது பாஜக. இப்போது அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளுமே பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

உபி
இதேபோல உத்தரப்பிரதேசத்திலும் ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கிவிட்டது பாஜக. பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று முகாமிட்டுள்ளார்.

பாஜகவுக்கு தாவல்
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் 3 எம்.எல்.சி.க்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.சி. ஒருவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர்களுடன் சமாஜ்வாதி கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு தாவ தயாராக இருக்கின்றனராம்.

அகிலேஷ் கொந்தளிப்பு
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், இது ஒரு அரசியல் ஊழல்.. கட்சியில் இருந்து வெளியே போக விரும்புகிறவர்கள் போகலாம். இதற்கு பாரதிய ஜனதாதான் காரணம் என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications