எம்.பி.க்கள் அமளி... 22 நாட்கள் செயல்படாமல் முடங்கிய நாடாளுமன்றம்... 250 மணி நேரங்கள் வீண்!
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு எம்.பிக்களின் தொடர் அமளி காரணமாக செயல்படாமலே முடிந்துள்ளது. லோக்சபாவும் ராஜ்யசபாவும் 250 மணி நேரங்கள் செயல்படாமலே முடங்கிப் போனதாக நாடாளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட முதல் அமர்வு சுமூகமாக நடந்த நிலையில், இரண்டாவது அமர்வு பெரும்பாலான நேரத்தில் கூச்சல், குழப்பத்திலேயே கழிந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க எம்.பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி ஆந்திர எம்.பி.க்களும், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கி முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு சபைகளும் கூடுவதும் ஒத்திவைப்பதுமாகவே கழிந்தது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதனையடுத்து தெலுங்கு தேசம் கட்சியும் தனது அமைச்சர்கள் இரண்டு பேரை அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய வைத்ததோடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவிற்கு நெருக்கடி தந்தது. இதோடு நின்றுவிடாடல் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்தது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சியும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தது.
தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக
நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அ.தி.மு.க எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, நோட்டீஸை எடுத்துக்கொள்ள முடியாது என மக்களவை சபாநாயகர் அறிவித்தார். மத்திய அரசை காப்பாற்றுவதற்காகவே அ.தி.மு.க. அவையை முடக்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
22 நாட்கள் செயல்படாமல் முடக்கம்
தொடர்ந்து 22 நாட்களாக சபை கூடுவதும் எம்.பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபடுவதும் பின்னர் ஒத்திவைக்கப்படுவதுமாகவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தது. லோக்சபா, ராஜ்யசபா இன்றோடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எத்தனை மணி நேரம் ஒழுங்காக நடந்தது, எத்தனை கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளனர், எத்தனை மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற செயலகம் விவரங்களை வெளியிட்டுள்ளது.
127 மணி நேரம் வீண்
இதன்படி லோக்சபாவில் எம்.பி.க்கள் எழுப்பிய 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர். மற்ற கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டுள்ளது. 29 அமர்வுகளாக நடந்த லோக்சபாவில் 34 மணிநேரம் 5 நிமிடம் மட்டுமே அலுவல்கள் நடந்துள்ளன, எஞ்சிய 127 மணிநேரம் 45 நிமிடம் அமளியால் முடங்கியுள்ளது. நிதிமசோதா, பணிக்கொடை உயர்வு மசோதா உள்பட 5 மசோதாக்கள் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், நிதிமசோதா கடும் அமளி காரணமாக விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
121 மணி நேரம் முடக்கம்
ராஜ்யசபாவை பொறுத்தவரையில் 30 அமர்வுகள் திட்டமிடப்பட்டது. வெறும் 44 மணி நேரம் மட்டுமே ராஜ்யசபா நடந்துள்ள நிலையில், 121 மணிநேரம் சபையின் அலுவல்கள் எம்.பிக்களின் அமளியால் முடங்கியதாக நாடாளுமன்ற செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.