4 மாநில சட்டசபை இடைத்தேர்தல்கள்.. பின்னடைவை சந்தித்த பாஜக! உற்சாகத்தில் காங்கிரஸ்!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வென்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிய பாரதிய ஜனதாவுக்கு 4 மாநில சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.
பீகார், கர்நாடகம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மொத்தம் 18 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 21-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பீகாரில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

லாலு நிதிஷ் கூட்டணி அபாரம்!
அம்மாநிலத்தில் பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்த மதச்சார்பற்றக் கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தோல்வியை தழுவிய பாஸ்வான் கட்சி
பாஜக கூட்டணியில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (எல்ஜேடி) பார்பட்டா தொகுதியில் தோல்வியைத் தழுவியது.

அன்று பாஜக வசம்!
பீகாரின் இந்த 10 தொகுதிகளில் 2010ஆம் ஆண்டு தேர்தலின்போது, 6-இல் பாஜகவும், 3-இல் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், 1-இல் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசம்..
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 3 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

பஞ்சாபில்...
இம் மாநிலத்தில் இரு சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், சிரோமணி அகாலி தளம் கட்சியும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.

டெபாசிட் இழந்த ஆம் ஆத்மி
கடந்த லோக்சபா தேர்தலில் 4 எம்.பி.களை பெற்ற ஆம் ஆத்மி இந்த சட்டசபை 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன் டெபாசிட்டையும் பறிகொடுத்தது.

கர்நாடகத்தில்
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் மூன்றில் இரண்டு தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜகவுக்கு ஓரிடம் கிடைத்தது. பாரதிய ஜனதாவின் கோட்டையான பெல்லாரி புறநகர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

எதியூரப்பா மகன்
ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா வெற்றி பெற்றார். இந்த வெற்றி பாஜகவுக்கு ஆறுதலைக் கொடுத்தாலும், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாதது பாஜக தொண்டர்களை உற்சாகம் குன்றச் செய்துள்ளது.

காங்கிரஸூக்கு 10
மொத்தமாக 4 மாநிலங்களிலும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் 10 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது, 8 இடங்களைத்தான் பாஜகவால் கைப்பற்ற முடிந்தது.

3 மாதத்தில் பின்னடைவு
லோக்சபா தேர்தல் முடிவடைந்த 3வது மாதத்தில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காங்கிரஸ் உற்சாகம்
அதே நேரத்தில் லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு, இடைத்தேர்தல் வெற்றி உற்சாகத்தைத் தந்துள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியைக் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications