குடியுரிமை மசோதா: அஸ்ஸாமில் பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் மோதல்- ரயில் சேவை முடக்கம்
Recommended Video
குவஹாத்தி: அஸ்ஸாமில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததால் அப்பகுதிகள் போர்க்களமாகி உள்ளன.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் தங்களது பாரம்பரிய நிலம், அகதிகளுக்கு தாரை வார்க்கப்படும் அபாயம் உள்ளது என்பது வடகிழக்கு மாநில மக்களின் அச்சம். தங்களது இனக்குழுக்களின் அடையாளத்தை பாதுகாப்பதில் தொடர்ந்து போராடுகிறவர்கள் வடகிழக்கு இன குழுக்கள்.

இதனால்தான் இம்மாநிலங்கள் பலவற்றிலும் இந்திய குடிமக்களாக இருந்தாலும் கூட சிறப்பு அனுமதி பெற்றுதான் உள்ளே நுழைய முடியும் என்கிற நடைமுறை அமலில் இருக்கிறது. ஏற்கனவே அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஒட்டுமொத்தமாக வடகிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் முழு அடைப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு தீப்பந்தங்களுடன் பேரணியாக செல்கின்றனர். கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.
வாகனங்களை தடுத்தவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. இதனிடையே திரிபுராவில் பல இடங்களில் இணையசேவைகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
தண்டவாளங்களை பல இடங்களில் போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவையும் முடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications