விலை உயர்வை தடுக்க 1.5 லட்சம் டன் பருப்பு வகைகளை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு
டெல்லி: பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றரை லட்சம் டன் பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்து இருப்பு வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டில் பருப்பு விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, பருப்பை பதுக்குபவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, பருப்பு வகைகளை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றரை லட்சம் டன் பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்து, அதனை இருப்பு வைக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டி ஒப்புதல் அளித்தது.
இந்த பருப்பு வகைகளானது நடப்பு ஆண்டிலேயே சந்தை விலையில் வாங்கி இருப்பு வைக்கப்படும். பின்னர் பருப்பு விலை கடுமையாக உயரும் போது, அவை விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பப்படும்.
பருப்பு விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கீழே இறங்கினால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கே பருப்பு வாங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதோடு, தேவைப்பட்டால் பருப்பு வகைகளை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், தேசிய நீர்வழித்தட மசோதாவில் திருத்தங்கள் செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது 5 தேசிய நீர்வழித்தடங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒரு நீர்வழித்தடம், கேரளாவில் 3 நீர்வழித்தடம், கர்நாடகாவில் 5 நீர்வழித்தடம் உள்பட 106 நீர்வழித்தடங்கள் தேசிய நீர்வழித்தடங்களாக அறிவிக்கப்பட உள்ளன.
இதன்மூலம், தேசிய நீர்வழித்தடங்களின் எண்ணிக்கை 111 ஆக உயரும். இந்த அறிவிப்பால், மத்திய அரசுக்கு உடனடியாக நிதிச்சுமை எதுவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வீடு வாங்குவோரின் நலன் கருதி, இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. வீடுகள் கட்டுமானத்தை உரிய நேரத்தில் முடித்துக் கொடுப்பதற்கும், ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை ஒழுங்குபடுத்த மாநிலங்கள் தோறும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதற்கும் இம்மசோதா வகை செய்யும்.
மத்திய அமைச்சரவையில் இந்த ஒப்புதலைத் தொட்ர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இம்மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.












Click it and Unblock the Notifications