மேற்கு வங்கத்தில் 2010 முதல் வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களும் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி
கொல்கத்தா: 2010ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களும் ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஓபிசி சான்றிதழ் சாதிகள் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அப்படி மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2010 க்குப் பிறகு வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களும் 1993ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பு கமிஷன் சட்டத்திற்கு எதிரானதாக உள்ளதாக கூறி பொதுநல வழக்கு கடந்த 2011ல் தாக்கல் செய்யப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் எனவே மேற்கு வங்கத்தில் ஓபிசி சான்றிதழ் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று பொதுநல மனுவில் முறையிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து வந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி தபபிரதா சக்ரபிர்த்தி மற்றும் ராஜசேகர் மந்தா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அமர்வு வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி 2010க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட ஓபிசி பட்டியலை 'சட்டவிரோதம்' என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் டிவிசன் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் சட்டம், 2012 பிரிவில் உள்ள 2H, 5, 6 மற்றும் பிரிவு 16 மற்றும் அட்டவணை I மற்றும் III ஆகியவை 'அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், 2010க்கு பிறகு வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
அப்போது மேற்கு வங்க அரசு வழக்கறிஞர் சுதீப்தா தாஸ்குப்தா குறுக்கிட்டு, 2010 க்குப் பிறகு ஓபிசி சான்றிதழ் பெற்றவர்கள் கொல்கத்தா உயர் நீதிமன்ற விசாரணையின் சுமையைத் தாங்க மாட்டார்கள். 2010 மற்றும் 2024 க்கு இடையில் வழங்கப்பட்ட அனைத்து OBC சான்றிதழ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளனர் . இந்த சான்றிதழ் மூலம் அரசு வேலை, கல்வி இடஒதுக்கீடு பெற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
இதையடுத்து தீர்ப்பு குறித்து தெளிவுப்படுத்திய கொல்கத்தா உயர்நீதிமன்றம், ஓபிசி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டபோதிலும், ஏற்கனவே இந்தசான்றிதழ்கள் மூலம் பணியில் உள்ளவர்கள் அல்லது இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்தவர்கள் அல்லது மாநிலத்தில் தற்போது நடந்து வரும் தேர்வில் வெற்றி பெற்றவர்களை இந்த உத்தரவு பாதிக்காது என்று கூறியது.
அதேபோல் 2010 க்கு முன் 66 சாதியினரை ஓபிசி வகுப்புகளை வகைப்படுத்தும் மாநில அரசின் நிர்வாக உத்தரவையும் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாதிக்காது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். அதேநேரம் 1993ல் கொண்டுவரப்பட்ட மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பு கமிஷன் சட்டப்படி ஓபிசி சான்றிதழ்களை தயாரிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு பதிலளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மாட்டோம் என்று கூறியதுடன், பாஜகவை கடுமையாக சாடியிருக்கிறார். இது பற்றி மம்தா பானர்ஜி கூறுகையில் "பாஜகவின் உத்தரவை நாங்கள் ஏற்க மாட்டோம். ஓபிசி இடஒதுக்கீடு தொடரும். அவர்களின் அடாவடித்தனத்தை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். இது ஒரு கலங்கிய அத்தியாயம். இதனை நான் செய்யவில்லை. உபென் பிஸ்வாஸ் இதனை செய்தார். ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு முன்பு ஆய்வுகள் நடத்தினோம். ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் இதில் எந்த முடிவும் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற கொள்கை முடிவுகள் பற்றி ஏன் கேள்விகள் எழுப்பப்படுவது இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications