அன்னா ஹசாரே சிரிப்பார்.. கிரண் பேடி!
டெல்லி: அன்னா ஹசாரேவைத் தொடர்பு கொள்ள பலமுறை போனில் முயன்றும் அவருடன் தன்னால் பேச முடியவில்லை என்று கிரண் பேடி கூறியுள்ளார்.
அன்னாவுடனும், கெஜ்ரிவாலுடனும் இணைந்து ஆரம்பத்தில் செயல்பட்டவர் கிரண் பேடி. ஆனால் காலப் போக்கில் ஆளுக்கு ஒரு பக்கமாக மூன்று பேருமே பிரிந்து போய் விட்டனர். இந்த நிலையில் கிரண் பேடி தற்போது பாஜகவில் சேர்ந்து விட்டார்.

இதனால் அன்னா ஹசாரே கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிரண் பேடியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அன்னா ஹசாரேவுக்கு நான் பலதடவை தொலைபேசியில் பேச முயற்சி செய்தேன். அப்போதெல்லாம் ஒன்று அவர் தூங்கிக் கொண்டிருந்தார் அல்லது ஓய்வில் இருந்தார். அதனால் பேச முடியவில்லை.
விடாமல் நான் தொலைபேசியில் பேச முயற்சிப்பேன். ஒரு வேளை அன்னா என்னிடம் பேசினால் என்ன சொல்வார் எனக்கு இப்போதே தெரியும். அவர் சிரிப்பார், அவ்வளவுதான் என்று கூறியுள்ளார் பேடி.
65 வயதான கிரண் பேடி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார். ஆரம்பத்தில் அன்னா, கெஜ்ரிவால் ஆகியோருடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். பின்னர் இந்தக் கூட்டணி உடைந்தது.
ஜனவரி 15ம் தேதி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் கிரண் பேடி. ஆனால் தான் பாஜகவில் சேரப் போவது குறித்து அன்னாவிடம் தெரிவிக்கவில்லையாம் பேடி. இதனால் அன்னா அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications