ஜெயலலிதாவை சந்திப்பதில் சிரமம் ஏதுமில்லை: நிர்மலா சீதாராமன்
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதில் எனக்கு பிரச்சினை ஏதும் இருந்தது இல்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
டெல்லியில், பாஜக தலைமையகத்தில் நேற்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் குறித்த கேள்விக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று அந்த அமைச்சர்கள் கூறியிருப்பது அவர்களுடைய தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம்.

என்னை பொறுத்தவரையில் நான் பலமுறை முதல்வரை சந்தித்திருக்கிறேன். அவரை சந்திப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. அவரை எனது தமிழக பயணத்தின் போதும், அவர் டெல்லி வந்தபோதும் எளிதாக சந்திக்க முடிந்தது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய பெண் தீவிரவாதி இஷ்ரத் ஜகான், என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். மோடியை அரசியல் ரீதியாக சமாளிக்க முடியாததால், அவர் கொல்லப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்பியது. சதித்திட்டம் உருப்பெறுவதை அக்கட்சி மவுனமாக வேடிக்கை பார்த்தது.
சோனியா காந்தியே இதில் தீவிரமாக ஈடுபட்டார். என்கவுண்ட்டருக்கு பிறகு அவர் ஆமதாபாத்துக்கு சென்று, தீவிரவாத சதித்திட்டம் குறித்து உளவுத்துறை தகவல் எதுவும் வரவில்லை என்று கூறினார். மோடிக்கு எதிரான தீவிரவாத சதித்திட்டத்தை அவர் குறைத்து மதிப்பிட்டார்.
இஷ்ரத் ஜகான் என்கவுண்ட்டர் குறித்த காங்கிரஸ் மத்திய அரசின் பிரமாண மனுவை அப்போதைய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் திருத்தினார். இதற்கு காங்கிரஸ் கட்சி, குறிப்பாக சோனியாவும், ராகுலும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.












Click it and Unblock the Notifications