மிஷன் 156 உடன் இறங்கிய "மெஜிசியன்" கெலாட்.. யார்க்கர் போட்டு ஆப் செய்த பாஜக.. இதுதான் ராஜஸ்தான் களம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று தான் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அங்கே மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில், அதில் குறைந்தது 101 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்.

ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 71.64% வாக்குகள் பதிவானது. அங்கே இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.
மேஜிக்: இந்தத் தேர்தல் ராஜஸ்தான் அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் அசோக் கெலாட்டிற்கு ரொம்பவே முக்கியமானது. இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைப்பதன் மூலம் அவர் 4ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்பார். இதன் மூலம் தனது அரசியல் ஆளுமையை அவர் அழுத்தமாகப் பதிய வைக்க விரும்புகிறார்.
கெலாட் எளிமையான இமேஜை கொண்டிருப்பது வெகுஜன மக்களிடையே அவரை பிரபலமான தலைவராக வைத்திருக்கிறது. எதிரிகளை எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அவர்களை பக்காவாக திட்டம் போட்டுச் சாய்த்துவிடுவார். இதன் காரணமாகவே அவரை ராஜஸ்தானில் மேஜிசியன் என்று அழைக்கிறார்கள். கடந்த காலங்களிலும் அவர் பல முறை இதையே செய்துள்ளார்
மிஷன்-156: இந்த முறை அவர் 'மிஷன்-156' என்ற இலக்குடன் களமிறங்குகிறார். அதாவது ராஜஸ்தானில் அதிகபட்சமாகக் காங்கிரஸ் இதுவரை 155 இடங்கள் வரை பெற்றுள்ளது. அதை முறியடித்து இந்தத் தேர்தலில் 156 இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு கெலாட் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் கெலாட் அரசு ராஜஸ்தானில் பல்வேறு நலத்திடங்களை மேற்கொண்டுள்ள நிலையில், அதன் மூலம் வெல்ல முடியும் என்று கெலாட் நம்புகிறார்.
ராஜஸ்தானில் ஆட்சி யாருக்கு! "காங்கிரஸ் vs பாஜக.." தேர்தல் வேற நெருங்கிடுச்சு.. வெளியான பரபர சர்வ
ராஜஸ்தான் மாடல் அரசு என்பதை முன்னிறுத்தும் அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் ராஜஸ்தான் அரசு மேற்கொண்டுள்ள நலத்திட்டங்களைப் பட்டியலிடுகிறார். தனது நலத்திட்டங்கள் சமூகத்தின் பல்வேறு அடுக்குளில் இருப்போருக்கும் பலன் அளித்துள்ளது என கெலாட் நம்புகிறார். இதனால் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும் என அவர் நம்புகிறார்.
பிரச்சினைகள்: இவ்வளவு பாசிட்டிவ்கள் இருந்தாலும் கூட பிரச்சினைகளும் அங்கே கெலாட்டை சூழ்ந்தே இருக்கிறது. அதில் முக்கியமானது உட்கட்சி பிரச்சினை. பல ஆண்டுகளாகவே கெலாட்டிற்கும் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் இருக்கிறது. இது கடந்த 2020இல் கெலாட்டிற்கு எதிராக பைலட் போர்க்கொடி தூக்கி ஆட்சிக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்குக் கூட சென்றது. டெல்லி தலைமை தலையிட்ட பிறகு நிலைமை ஓரளவுக்குச் சீரானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழலே இருக்கிறது.
அதேபோல கெலாட் அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மேலும் சிக்கலாக்கியுள்ளன. ராஜஸ்தான் அரசின் நலத்திட்டங்கள் பெரியளவில் அரசுக்கு எதிரான மனநிலை உருவாகாமல் பார்த்துக் கொண்டாலும் கூட ஊழல் புகார் மைனஸாக இருக்கிறது. மேலும், பல காங்கிரஸ் எம்எல்ஏக்களை அணுகவே முடிவதில்லை என்ற புகாரும் இருக்கிறது.
பக்காவான வியூகம்: இந்தத் தேர்தலில் பாஜக முக்கியமான ஒரு வியூகத்தைக் கையில் எடுத்தது. அதாவது அவர்கள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக கெலாட் vs பிரதமர் மோடி என்ற இமேஜை உருவாக்கினார்கள். ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் பிரதமர் மோடிக்கு தனியாகச் செல்வாக்கு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இது பாஜகவுக்கு வாக்குகளை ஈர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இப்படி அங்கே இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கிறது. இதில் ஆட்சியைத் தக்கவைத்து 4ஆவது முறையாக கெலாட் முதல்வர் பதவிக்கு வந்தால், அது அவரது அரசியல் இமேஜை வேற லெவலுக்கு எடுத்துச் செல்லும். அதேநேரம் தோல்வி என்பது அவரை ஓரங்கட்ட ஒரு காரணமாக இருக்கும். சச்சின் பைலட் தனது வாய்ப்பிற்காக பின்னாலேயே காத்திருக்கிறார்.
ராஜஸ்தானில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறி வரும் நிலையில். இந்த முறை அந்த டிரெண்டை மாற்றும் வலிமை அவருக்கு இருக்கிறதா என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications