சீனாவின் ஜிடிபி வளர்ச்சியை இந்தியா தாண்டுமா, இல்லையா? – நிபுணர்களின் அலசல்
டெல்லி: 2016 ஆம் ஆண்டு வாக்கில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சியை இந்தியா தாண்டி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர்களும் அவ்வாறே கூறி வருகின்றனர்.
ஆனால் உண்மை நிலவரத்தைப் பார்த்தால் 2032 ஆம் ஆண்டுக்கு முன்பு அது சாத்தியமல்ல என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்று இந்தியாஸ்பெண்ட் இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவும், இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக முன்னேறி வருகின்றன. அதில் சீனா அசுர பலத்துடன் நம்மை விட மேலான நிலையில் உள்ளது. ஆனால் இந்த வளர்ச்சியை நாம் 2016ம் ஆண்டில் தாண்டி விடுவோம் என்று நமது பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் சர்வதேச நிதியத்தின் புள்ளி விவர அறிக்கையைப் பார்த்தால் இப்போதைக்கு நாம் சீனாவின் வளர்ச்சிக்கு அருகில் கூட போக முடியாது என்றே தோன்றுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வித்தியாசம் மிகப் பெரிதாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் நமக்கு முன்பே சீனா பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கலுக்கு மாறியதே. அதாவது 70களிலேயே டெங் ஜியோபிங் தலைமையிலான சீன அரசு தாராளமயமாக்கலுக்கு மாறி விட்டது. மாறாக இந்தியா, 1991ம் ஆண்டுதான் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான அரசின் ஆட்சியின்போதுதான் தாராளமயமாக்கலுக்கு மாறியது.
80களின் இறுதியில், சீனாவை விட இந்தியா பெரிய பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் 1986ம் ஆண்டு சீனா நம்மை முந்தியது. அப்போது அதன் ஜிடிபியானது 710 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் ஜிடிபி 698 பில்லின் டாலராக இருந்தது. அதன் பின்னர் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்தவண்ணமே இருந்தது. இந்தியாவும் சீரான வளர்ச்சிப் பாதையில்தான் இருந்தது. ஆனால் நம்மை விட வேகமாக வளர்ந்து விட்டது சீனா.
தற்போதைய வேகத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் கூட 2032 ஆம் ஆண்டுக்கு முன்பாக சீனாவை நாம் முந்தக் கூடிய வாய்ப்பில்லை என்கிறது சர்வதேச நிதியத்தின் அறிக்கை.
ஒரு வேளை 2016 ஆம் ஆண்டிலேயே நாம் அசுரத்தனமாக வளர்ந்து சீனாவை முந்தினால் நிச்சயம் மகிழ்ச்சிதான்.












Click it and Unblock the Notifications