வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - தேர்தல் ஆணையம்
டெல்லி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில்:
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், அந்தக் கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.

எனினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்து ஆலோசித்த பின்பு, கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக நாட்டில், தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகளை அளிப்பதற்கு தங்களுக்கு உரிமை உள்ளது என்று அரசியல் கட்சிகள் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்தன.
எனினும், தேர்தல் முடிவுகளையே பாதிக்கும் அளவுக்கு இலவசங்கள் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது."
-இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications