"மோடியின் ஸ்டைலை பாலோ பண்ணுங்க.." கனடா பிரதமருக்கு ஐடியா தரும் இந்திய அமைப்பு.. இதுதான் காரணம்
ஒட்டாவா: கனடாவில் வேக்சினுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில், இதற்கு இந்திய- கனடா அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
கனடாவில் பெரும்பாலான மக்கள் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்ட போதிலும், குறிப்பிட்ட சிலர் வேக்சின் போட்டுக்கொள்ளத் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இதையடுத்து அனைவரும் வேக்சின் செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்தது.
அதாவது அந்நாட்டின் டிரக் ஓட்டுநர்கள் அமெரிக்கா- கனடா எல்லையைக் கடக்கும் போது கட்டாயம் வேக்சின் போட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்நாட்டின் டிரக் ஓட்டுநர்களில் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கனடா போராட்டம்
கனடா தலைநகர் ஒட்டாவாவை முற்றுகையிட்டுள்ள டிரக் ஓட்டுநர்கள், அங்கேயே தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டுத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்துகிறது.. இந்தச் சூழலில் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் கனடா நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்த அந்நாட்டின் ஜஸ்டின் ட்ரூடோ, போராட்டக்காரர்களுக்குச் செல்லும் நிதியுதவியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஜனநாயக முறை
ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த அறிவிப்புக்கு ஒரு பகுதியினர் வரவேற்பு தெரிவித்தாலும், மற்றொரு பகுதியினர் இது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் ஜனநாயக நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் போராட்டம் நடத்தவும் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்கவும் உரிமை உள்ளதாகத் தெரிவித்தனர். டிரக் ஓட்டுநர்கள் போராட்டத்தை ஒடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அதை ஜனநாயக முறையில் தீர்க்க வேண்டும் எனக் கனடா இந்தியா குளோபல் ஃபோரம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி
இது தொடர்பாகக் கனடா இந்தியா குளோபல் ஃபோரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனடாவில் சமீபத்திய நடக்கும் செயல்களைக் கண்டு நாங்கள் வேதனை அடைகிறோம். இந்த நேரத்தில், 2021இல் இந்தியாவில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும், பிரதமர் மோடியின் கீழ் இந்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஜனநாயக மற்றும் அமைதியான வழிகளில் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்ததை நினைவு கூர்கிறோம்

ஆலோசனை
இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த போது, அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து இந்திய அரசுக்குப் பிரதமர் ட்ரூடோ ஆலோசனை எல்லாம் வழங்கினார். அதைத் துரதிர்ஷ்டவசமாக, அவரது ஆலோசனைகளை அவரே பின்பற்றவில்லை. ஜனநாயக வழிமுறைகள் மூலம் அமைதியான போராட்டங்களைக் கையாள்வதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்ற வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video

ட்ரூடோ
கடந்த 2020 டிசம்பரில், விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களின் போது கனடா பிரதமர் ட்ரூடோ, "அமைதியான போராட்டத்திற்கான உரிமையைப் பாதுகாக்கக் கனடா எப்போதும் இருக்கும். எந்தவொரு விஷயத்திலும் பேச்சுவார்த்தை முக்கியம் என்பதை நாங்கள் நம்புகிறோம், அதனால்தான் இது தொடர்பாக இந்திய அதிகாரிகளை நேரடியாகப் பல வழிகளில் அணுகியுள்ளோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications