தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பை ரத்து செய்தது பாக்: துரதிரஷ்டவசமான முடிவு - இந்தியா
லக்னோ: தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பை பாகிஸ்தான் அரசு ரத்து செய்து விட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் பேச்சுவார்த்தையை விரும்பவே செய்தோம். ஆனால் பாகிஸ்தான்தான் ரத்து செய்து விட்டது என்று கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதும், நடைபெறாமல் போவதும், பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொறுத்தது என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்தியா எப்போதுமே பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறது. பேச்சுவார்த்தையை அது வெறுத்ததில்லை என்றும் ராஜ்நாத் சிங் விளக்கியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் சந்தித்துப் பேசுவது என திட்டமிடப்பட்டிருந்தது. நாளை இந்த சந்திப்பு நடைபெருவதாக இருந்தது.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்
இந்த நிலையில்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்களை அதிகரித்தது. தொடர்ந்து இந்திய நிலைகளைக் குறி வைத்து தாக்கி வந்தது. இதனால் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது கேள்விக்குறியானது.
முந்திக் கொண்ட பாகிஸ்தான்
மத்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல பிள்ளை மாதிரி முந்திக் கொண்ட பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
நாங்கள் பொறுப்பல்ல.. ராஜ்நாத் சிங்
இதுகுறித்து லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது துரதிர்ஷ்டவசமானது. இதற்கு நாங்கள் பொறுப்பல்ல. பாகிஸ்தான்தான் ரத்து செய்துள்ளது. இந்தியா அல்ல.
நல்லுறவையே விரும்புகிறோம்
இந்தியா எப்போதுமே நல்லுறவையே விரும்புகிறது. பேச்சுவார்த்தையை அது வெறுத்ததில்லை. ஆனால் பாகிஸ்தான் தனது செயல்பாடுகளில் அக்கறை காட்டுவதில்லை.
பாகிஸ்தான் தடம் மாறக் கூடாது
ஜூலை மாதம் இரு நாட்டு பிரதமர்களிடையே நடந்த சந்திப்பின்போது அளிக்கப்பட்ட உறுதி்மொழிகளைக் காப்பாற்றும் வகையில் பாகிஸ்தான் செயல்பட வேண்டும். அதிலிருந்து தடம் புரளக் கூடாது என்றார் அவர்.