ஜார்க்கண்ட்: ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் 1ம் வகுப்பு மாணவன் சாவு
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத ஒன்றாம் வகுப்பு மாணவரை ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் பெயர் சுர்ஜித், 7 வயதான இந்த மாணவன், ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி புறநகர் பகுதியில் ராகசிய உக்ரமித் மத்ய வித்யாலயா எனும் தனியார் பள்ளியில்1ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 28-ந் தேதி அன்று ஆசிரியர் அர்சாத் உசேன் கேள்வி கேட்டதற்கு பதில் அளிக்க தெரியாததால் சுர்ஜித்தை பிரம்பால் அடித்தார்.
முதுகு பகுதியில் அடித்ததால் அவனுக்கு வலி அதிகமாக இருந்தது. இதனால் மறுநாள் ஆசிரியர் அடித்தது குறித்து பெற்றோரிடம் புகார் கூறினான். 29ம் தேதி பள்ளிக்கும் செல்லவில்லை. அவனது தாய் வலி நிவாரண மாத்திரை கொடுத்தார். இந்த நிலையில் ஞாயிறன்று காலை மாணவன் சுர்ஜித் இறந்தான்.
இது குறித்து மாணவனின் தந்தை மகேதோ முன்டா போலீசில் புகார் செய்தார். ஆசிரியர் பிரம்பால் அடித்ததால்தான் தனது மகன் இறந்ததாக போலீசில் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆசிரியர் அர்சாத் உசேன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி ஜெயந்த் மிஸ்ரா அந்த ஆசிரியரை தற்காலிகள் நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications