கலவரத்தை மேலும் தூண்டியதாக புகார்! எடிட்டர்ஸ் கில்டு நிர்வாகிகள் மீது மணிப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மேலும் மோதல்களை உருவாக்க முயன்றதாக எடிட்டர்ஸ் கில்டு பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 4 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மணிப்பூரில் தேர்தல் ஆதாயத்திற்காக பெரும்பான்மையாக இருக்கும் மெய்டெய் சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலுக்குள் கொண்டுவருவதாக பாஜக தேர்தல் வாக்குறுதியை கொடுத்தது. இதனையடுத்து எதிர்பார்த்ததை போல பாஜக அரசு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றமும் வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக அரசுக்கு உத்தரவிட்டது. இதுதான் கலவரத்திற்கான தொடக்கப்புள்ளி.

இப்படி ஏற்பட்ட கலவரம் கடந்த 4 மாதங்களாக நீடித்து வருகிறது. 160 பேர் கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். அதேபோல பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி குடிபெயர்ந்துள்ளனர். துணை ராணுவப்படைகள் மணிப்பூரில் முகாமிட்டுள்ள நிலையிலும் கூட இந்த கலவரம் முடிவுக்கு வரவில்லை. கலவரத்தை ஒடுக்க மாநில அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கியுள்ளன. இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தற்போது எடிட்டர்ஸ் கில்டு நிர்வாகிகள் 4 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பிரேண் சிங் விளக்கமளிக்கையில், "மணிப்பூர் மாநிலத்தில் மேலும் மோதல்களை உருவாக்க முயன்றுள்ளனர். எனவே எடிட்டர்ஸ் கில்டு நிர்வாகிகள் 4 பேர் மீது மாநில காவல்துறை எப்ஃஐஆரை பதிவு செய்துள்ளது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, மணிப்பூரில் நடந்த கலவரங்கள் குறித்த ஊடக அறிக்கைகளை ஆய்வு செய்த எடிட்டர்ஸ் கில்டு, ஊடகங்களின் செய்திகள் ஒருதலைபட்சமானவை என்றும், மாநிலத் தலைமை பக்கச்சார்பானது என்றும் குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இவர்கள் மீது எப்ஃஐஆர் பதிவு செய்ய போலீஸ், ஐபிசி பிரிவு 153-A200/295/298/500/505(1)(b)/505(2))120-Bவை பயன்படுத்தியுள்ளது. இந்த வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு இந்திய 'பிரஸ் கிளப்' வலியுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications