'தமிழகத்துக்கு சொட்டு தண்ணி தரமாட்டோம்'...அதைத்தானே இன்னிக்கும் சொல்லப் போறீங்க?
பெங்களூரு: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வரும் கர்நாடக அரசு, இன்று மீண்டும் சட்டசபை மற்றும் சட்ட மேலவைக் கூட்டி புதிய முடிவை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளது.
காவிரியில் தமிழகத்தின் உரிமையைக் கோரி தமிழக அரசு தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு தினமும் 3000 அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்றே, அணையை மூடி, ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்குத் தர மாட்டோம் என்று அறிவித்தது கர்நாடகம். அதை சட்டசபையில் தீர்மானமாகவும் நிறைவேற்றியது.

இதனைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், கடந்த 30 ம் தேதி கடைசி வாய்ப்பை வழங்கியது கர்நாடகத்துக்கு. அதன்படி அக்டோபர் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தினமும் 6000 கனஅடி நீரை தமிழகத்துக்குத் தர வேண்டும்... அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவையும் காற்றில் பறக்கவிட்ட கர்நாடகம், தொடர்ந்து, "தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கிடையாது," என்ற பழைய பல்லவியையே பாடியது.
அத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெற வேண்டிய தனது பிரதிநிதிகளை தமிழக, புதுவை அரசுகள் அறிவித்துவிட்ட நிலையில், கர்நாடகம் அழுகுணித்தனமாக அமைதி காக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் வைத்த கெடு நாளையோடு முடிகிறது. 1 முதல் 6-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடச் சொன்னது உச்ச நீதிமன்றம். ஆனால் இன்றுவரை தண்ணீரையும் திறக்கவில்லை.
இந்த நிலையில்தான் மீண்டும் கர்நாடக சட்டசபை மற்றும் மேலவையை இன்று மீண்டும் கூட்டி புதிய தீர்மானம் நிறைவேற்றப் போகிறதாம் கர்நாடகம்.
அது என்னவென்பதுதான் ஏற்கெனவே தெரிந்ததாயிற்றே!












Click it and Unblock the Notifications