காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம்: அனந்தகுமார் சவடால்
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா என்னதான் முயன்றாலும் மத்திய அரசு அதற்கு அனுமதிக்காது என்று மத்திய உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அனந்தகுமார், "காவிரி மேலாண்மை வாரியம் எதற்காக அமைக்க கூடாது என்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி ஆகியோரிடம் நான் விளக்கம் அளித்துள்ளேன். கர்நாடக அனைத்துக் கட்சி குழு பிரதமரை சந்தித்தபோதும், காவிரி நதிநீரை நம்பிதான் பெங்களூரின் குடிநீர் தேவை உள்ளதையும், கர்நாடகத்தின் பல மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்டது என்பதையும் தெரிவித்துள்ளோம்.
ஆனால் ஜெயலலிதாவோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தை அரசியலாக்கி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அடுத்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. கோர்ட்டில் சிறப்பாக வாதத்தை முன்னெடுத்து வைத்து, நமது உரிமையை விட்டுக்கொடுக்காமல் பார்த்துக்கொள்வோம்". இவ்வாறு அனந்தகுமார் தெரிவித்தார்.