காவிரி வழக்கு: ஆக்ரோஷமாக வாதிடும்போது வார்த்தையை தவற விட்டு, வசமாக சிக்கிக் கொண்ட கர்நாடகா!
டெல்லி: காவிரி தண்ணீர் திறப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று, கர்நாடக தரப்பு இன்று ஆக்ரோஷமாக வாதம் முன் வைத்தது.
காவிரியிலிருந்து 50 டிஎம்சி தண்ணீர் கேட்டு தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கர்நாடக தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம், 20ம் தேதிவரை தண்ணீர் விட வேண்டும் என்று கடந்த 12ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீராய்வு மனுவால் கர்நாடகாவுக்கே இழப்பு அதிகமாகியது. எனவே, கர்நாடக தரப்பு வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், மீது கர்நாடகாவில் எதிர்ப்பு அதிகரித்தது. அவரை காவிரி வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், அரசுக்கு நெருக்கடி கொடுத்தன.
இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நாரிமன் மிகுந்த ஆக்ரோஷமாக வாதம் முன்வைத்தார். காவிரி மேற்பார்வை குழு விசாரித்து தண்ணீர் பங்கீடு குறித்து முடிவெடுக்கிறது. இதில் கோர்ட் அவ்வப்போது தலையிட்டு தண்ணீர் தர உத்தரவிட வேண்டாம். இது தவறு. காவிரி மேற்பார்வை குழு விசாரித்து, உத்தரவிடுகிறது. நாங்கள் அங்கு வாதிட்டுக்கொள்கிறோம். இது வறட்சி ஆண்டு என காவிரி மேற்பார்வை குழுவும் கூறியுள்ளது என்றார் ஃபாலி நாரிமன்.
ஆனால், இந்த வாதமே கர்நாடகாவுக்கு எதிராக மாறிப்போனது. தண்ணீர் திறப்பு குறித்து தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதும், அதற்கு நீதிமன்றம் பதில் உத்தரவு பிறப்பிப்பதும் தொடர் கதையாகி வந்தது. இதை நாரிமன் எதிர்த்ததன் காரணமாக, உச்சநீதிமன்ற பெஞ்சில் இருந்த நீதிபதிகளின் ஒருவரான அமித் மிஷ்ரா, ஒரு கருத்தை வெளியிட்டார்.
அதாவது, அவ்வப்போது உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாமெனில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றார். ஏனெனில், காவிரி தீர்ப்பாயம் 2007ல் கொடுத்த இறுதி தீர்ப்புபடி ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு செல்ல வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் அணை கட்டுப்பாட்டை அந்த வாரியமே எடுத்துக்கொண்டு தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடும்.
இப்போது போல கர்நாடகாவிடம், தமிழகம் போராடிக்கொண்டிருக்க தேவையில்லை. எனவேதான் மேலாண்மை வாரியம் அமைந்தால் அணை மீதான தங்கள் கட்டுப்பாடு தளர்ந்துவிடும் என கர்நாடகம் அஞ்சுகிறது. அரசியல் நெருக்கடிகளால் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் கர்நாடக கட்சிகள் தடுத்து வருகின்றன.
இப்போது நாரிமன் வாதத்தால், மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நெருக்கடி கொடுத்துள்ளது. இது கர்நாடகாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.