தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தராதே! கழுதைகளுடன் அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய கன்னட விவசாயிகள்!
மாண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கழுதைகளுடன் அரை நிர்வாணப் போராட்டத்தை கன்னட விவசாயிகள் நடத்தினர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய உத்தரவின்படி கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3834 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு எதிராக கன்னட விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கழுதைகளுடன் போராட்டம்: கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் கன்னட விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தினர். ஜெயசாமராஜேந்திர உடையார் சாலையில் அரை நிர்வாணத்துடன் வந்த விவசாயிகள், கழுதைகளுடன் போராட்டம் நடத்தினர். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, கன்னட விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது; முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். சில இடங்களில் கறுப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டம் நடத்தப்பட்டது.
மைசூரு: மைசூரு பேருந்து நிலையம் முன்பாக கன்னட விவசாயிகள், கன்னட அமைப்பினர் இணைந்து போராட்டம் நடத்தினர். கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் குரும்பூர் சாந்தகுமார் இப்போராட்டத்துக்கு தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
காவிரி பிரச்சனை: காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறந்துவிட மறுத்துவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கனவே 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. அப்போதும் சொற்ப அளவு காவிரி நீரைத் திறந்துவிட்டது. தற்போதும் வினாடிக்க் 5,000 கன அடி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இம்முறையும் சொற்ப அளவு நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதற்கும் கன்னட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

டெல்லியில் சித்தராமையா: இதனிடையே காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க முதல்வர் சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் கர்நாடகா எம்பிக்கள் உள்ளிட்டோரை சித்தராமையா சந்தித்து பேசுகிறார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு: காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்றத்திலும் கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு காவிநி நீரை திறக்க முடியாது என வாதிட திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications