டெல்லி முதன்மை செயலர் ராஜேந்திரகுமாரிடம் இன்றும் விசாரணை-வீட்டில் இருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல்
டெல்லி: ஊழல் முறைகேடு வழக்கில் டெல்லி அரசின் முதன்மை செயலாளரான ராஜேந்திரகுமாரிடம் சி.பி.ஐ .அதிகாரிகள் இன்று 2-வது நாளாக கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 14 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லியில் 49 நாள் முதல்வராக கேஜ்ரிவால் இருந்த போது அவரது தனிச்செயலராக இருந்தவர் ராஜேந்திர குமார். அண்மையில் அவர் டெல்லி அரசின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார்.

ராஜேந்திரகுமார் மீது ஊழல் புகார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவரது நியமனத்தை மத்திய அரசு ஏற்க மறுத்தது. இந்த நிலையில் ராஜேந்திரகுமார் மீது வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ. நேற்று அதிரடியாக டெல்லி தலைமைச் செயலகம், முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகம் மற்று ராஜேந்திரகுமாருக்கு சொந்தமான 14 இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் போது ராஜேந்திரகுமார் வீட்டில் இருந்து ரூ2.4 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதேபோல் ரூ3 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கின. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 14 மதுபாட்டில்களை தமது வீட்டில் ராஜேந்திர குமார் பதுக்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காகவும் ஒரு பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ28 லட்சம் ரொக்கமும் முடக்கப்பட்டது. நேற்று இரவு ராஜேந்திரகுமாரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ராஜேந்திரகுமாரிடம் கிடுக்குப்பிடி விசாரணை தொடர்கிறது.
ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் டெல்லி அரசின் பல ஒப்பந்தங்களை தாம் உருவாக்கிய போலி நிறுவனங்களுக்கே கொடுத்தார் ராஜேந்திரகுமார் என்பது சி.பி.ஐ. குற்றச்சாட்டு. ஆனால் சி.பி.ஐ-ன் இந்த குற்றச்சாட்டை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் நிராகரித்துள்ளார்.
மேலும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்புடைய டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றத்தான் இந்த சோதனையே நடத்தப்பட்டதாகவும் கேஜ்ரிவால் கூறியிருந்தார். இதை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறுத்திருந்தார்.
இன்றும் தொடரும் விசாரணையின் முடிவில் ராஜேந்திரகுமார் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications