கலைஞர் டிவிக்கு எதிரான அமலாக்கப் பிரிவின் வழக்கு விசாரணை செப். 23-க்கு ஒத்திவைப்பு!
டெல்லி: கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியது தொடர்பாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்த அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது குறித்த விசாரணை 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு ஆதாயமாக கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி பணம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டுள்ளன என்பது அமலாக்கப் பிரிவு வழக்கு.
இந்த வழக்கில் கலைஞர் டிவியின் இயக்குநரான திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொமொழி எம்.பி, ஸ்வான் பல்வா உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம்சாட்டி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். தயாளு அம்மாள் உட்பட அனைவருக்குமே ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்தக் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் கூடுதல் கால அவகாசம் கேட்டார்.
இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான விசாரணை வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.