ஹெலிகாப்டர் ஊழல்: கோவா ஆளுநரை மணிக்கணக்கில் துருவி எடுத்த சிபிஐ
டெல்லி: வி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியபோது நடந்த ஊழல் குறித்து கோவா ஆளுநர் வான்சூவிடம் சிபிஐ இன்று விசாரணை நடத்தியது.
வி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியபோது ஊழல் நடந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த எம்.கே. நாராயணன் சாட்சியமாக சேர்க்கப்பட்டு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து நாராயணன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானபோது நாராயணன் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார்.
இந்நிலையில் இந்த ஊழல் வழக்கில் கோவா ஆளுநர் பி.வி. வான்சூவின் பெயரும் சாட்சியமாக சேர்க்கப்பட்டது. இதையடுத்து ஊழல் குறித்து சிபிஐ அதிகாரிகள் வான்சூவிடம் இன்று மணிக்கணக்கில் விசாரணை நடத்தினர்.
ஹெலிகாப்டர் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டபோது வான்சூ சிறப்பு பாதுகாப்பு பிரிவின் தலைவராக இருந்தார். அவர் வி.வி.ஐ.பிகளுக்காக வாங்கப்பட்ட 12 ஹெலிகாப்டர்கள் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கும்படி பார்த்துக் கொண்டுள்ளார்.
ஹெலிகாப்டர்களின் தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான சிகோர்ஸ்கிக்கு அது கிடைத்தவாறு செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ரூ. 360 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த ஒப்பந்தம் கடந்த 2013ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ விசாரணை நடத்தியது குறித்து வான்சூ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சாட்சியமாக சிபிஐக்கு வாக்குமூலம் அளித்தேன். இந்த வாக்குமூலம் சிபிஐக்கு உதவும் என்று நம்புகிறேன். அவர்கள் விரைவில் விசாரணையை முடித்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான வான்சூ எம்.கே. நாராயணனை போல் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. 2012ம் ஆண்டு மே மாதம் கோவா ஆளுநராக பொறுப்பேற்ற வான்சூவின் பதவிக்காலம் வரும் 2017ம் ஆண்டு நிறைவடைகிறது.