அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து.. மஹுவா மொய்த்ராவுக்கு குறி? திடீர் ரெய்டில் இறங்கியது சிபிஐ
கொல்கத்தா: சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ தற்போது ரெய்டு நடத்தி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மஹூவா மொய்த்ரா. சமீபத்தில் இவர் மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விகள் பெரிய அளவில் விவாதமானது. அதாவது இவர் மொத்தம் 61 கேள்விகளை அவையில் எழுப்பியிருக்கிறார். அதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை.

எனவே, பாஜகவுக்கு எதிராக கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக மொய்த்ரா மீது பாஜக குற்றம்சாட்டியது. இது தொடர்பாக பாஜக எம்பி கொடுத்த புகாரின் அடிப்படையில், மொய்த்ரா எம்பி பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மட்டுமல்லாது, இவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த லோக்பால் அமைப்பு, மொய்தரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சிபிஐ-க்கு உத்தரவிட்டது.
விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்கவும், விசாரணை முன்னேற்றத்தை ஒவ்வொரு மாதமும் அறிக்கையாக தாக்கல் செய்யவும் தனது உத்தரவில் கூறியிருந்தது. இந்நிலையில், இன்று மொய்த்ரா தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டை மேற்கொண்டிருக்கிறது.
மொய்த்ரா கடந்த டிசம்பர் மாதம் எம்பி பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது பாஜக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. இருப்பினும், அவருக்கு மீண்டும் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் அவர் மேற்குவங்கத்தின் கிருஷ்ணநகரில் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நேற்று முன்தினம்தான் டெல்லி முதல்வரும், இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மொய்த்ரா தொடர்புடைய இடங்களில் சிபிஐ நடத்த தொடங்கியிருப்பது, அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்தை உருவாக்கியுள்ளதாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications