கோபிநாத் முண்டே விபத்து தொடர்பான வழக்கு: சிபிஐ களம் இறங்கியது!
டெல்லி: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் விபத்து பற்றிய வழக்கை விசாரிக்க சிபிஐ களம் இறங்கியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பீட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கோபிநாத் முண்டே. இவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இந்நிலையில் மோடியின் தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை இவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 3ஆம் தேதி அன்று டெல்லியில் இருந்து மும்பை செல்வதற்காக இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு காரில் சென்றார். டெல்லியின் பிரித்விராஜ் ரோடு - துக்ளக் ரோடு ரவுண்டானா பகுதியௌ அவருடைய கார் கடந்தபோது எதிரே வந்த மற்றொரு கார் அவருடைய காரின் மேல் பலமாக மோதியது.

திடீரென்று ஏற்பட்ட இவ்விபத்தில் காயமடைந்த கோபிநாத் முண்டே, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
கோபிநாத் முண்டேயின் இந்த திடீர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது பற்றி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி, மராட்டிய பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர்.
இதனால் கோபிநாத் முண்டேயின் மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் அந்த வழக்கை சி.பி.ஐ நேற்று விசாரணைக்கு ஏற்றது.
இது தொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோபிநாத் முண்டேயின் வழக்கில் சிபிஐ களம் இறங்கி இருப்பதால் பல திடீர் திருப்பங்கள் நிகழலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications