மத்திய அரசு பதிலடி.. மேற்கு வங்கத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு.. உச்ச கட்ட பரபரப்பு!
கொல்கத்தா போலீசுக்கு எதிராக தற்போது மேற்கு வங்கத்தில் மத்திய ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொல்கத்தா: கொல்கத்தா போலீசுக்கு எதிராக தற்போது மேற்கு வங்கத்தில் மத்திய ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் அங்கு உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகள் 15 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மாநில போலீஸ் அவர்களை கைது செய்து இருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மமதாவின் உத்தரவின்படி கொல்கத்தா போலீஸ் கைது நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
இன்று கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய முயன்றது. தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகியவற்றில் குற்றம்சாட்டி இந்த கைது நடவடிக்கையை எடுக்க சிபிஐ முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்துள்ளது.
உச்சகட்ட திருப்பமாக தற்போது கொல்கத்தா போலீஸ், மேற்கு வங்கத்தில் இருக்கும் அனைத்து சிபிஐ அதிகாரிகளையும் கைது செய்ய முயன்று வருவதாக செய்திகள் வருகிறது. மேற்கு வங்க மாநில சிபிஐ இயக்குனர் மற்றும் சிபிஐ துணை இயக்குனர் இருவரையும் தற்போது போலீஸ் கைது செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
இதனால் தற்போது மத்திய அரசு களத்தில் இறங்கி உள்ளது. சிபிஐ அதிகாரிகளை பாதுகாக்கும் விதத்தில் மத்திய அரசு அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையை களமிறக்கி இருக்கிறது.
கொல்கத்தாவில் சிபிஐ அலுவலகம் முன் சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மத்திய அரசு அலுவலகங்கள் முன்னும் ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள் .
சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீஸ் கைது செய்வதை தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது சிபிஐ vs போலீஸ் பிரச்சனை, மத்திய அரசு vs மாநில அரசு பிரச்சனையாக மாறியுள்ளது.