உ.பி.:பாக். வெற்றி கொண்டாட்டம்- 3 காஷ்மீர் மாணவர்கள் உட்பட 5 பேர் கைது- தேசதுரோக சட்டம் பாய்ந்தது!
லக்னோ: இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடியதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் உட்பட 5 பேர் தேசதுரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 7 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அர்ஷீத் யூசுப், இனாயத் அல்தாப் ஷேக், ஷோகத் அகமது கனாய். இந்த 3 மாணவர்களும் ஜம்மு காஷ்மீர் மாநில மாணவர்களுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் ஆக்ராவில் உள்ள ஆர்.எஸ்.பி. குழுமங்களுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தனர்.
துபாயில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது. இப்போட்டியில் பாகிஸ்தான் வென்றது. பாகிஸ்தான் வெற்றி பெற்றதை இந்தியாவில் கொண்டாடக் கூடாது என கடும் எதிர்ப்பு உள்ளது. பல இடங்களில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது பாதுகாப்பு சட்டங்கள், கைது நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.
இனவெறி.. மன்னிப்பு கேட்ட குயின்டன் டி காக்! முழங்காலிட சம்மதம்.. எங்க சித்தி கறுப்பினம் என விளக்கம்
ஆக்ரா பொறியியல் கல்லூரி
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த் அர்ஷீத் யூசுப், இனாயத் அல்தாப் ஷேக், ஷோகத் அகமது கனாய் ஆகிய 3 மாணவர்களும் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினர்; அவர்கள் இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் என வலதுசாரி இந்துத்துவா அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டு போலீசாரிடம் புகார் கொடுத்தனர். மேலும் பொறியியல் கல்லூரி முன்பாக இவர்கள் போராட்டமும் நடத்தினர்.
3 காஷ்மீர் மாணவர்கள் கைது
ஆனால் 3 மாணவர்களும் எந்த ஒரு தேசவிரோத செயலிலும் ஈடுபடவில்லை; நாட்டுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பவில்லை. கல்லூரியின் செயல்பாடுகளில் சமூக விரோதிகள் தலையிடுகின்றனர் என பொறியியல் கல்லூரி நிர்வாகம் விளக்கம் தந்தது. இருப்பினும் போலீசார் ஜம்மு காஷ்மீரின் 3 மாணவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் மாணவர்களிடையேயும் கல்லூரி நிர்வாகத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 காஷ்மீர் மாணவர்கள் வெளியேற்றம்
இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகி சுக்லா பேசுகையில், தற்போதைய நிலையில் எஞ்சிய 8 ஜம்மு காஷ்மீர் மாணவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு தெரிவித்திருக்கிறோம். அதே நேரத்தில் சமூக விரோதிகள் எங்கள் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைந்தது எப்படி? அது சட்டவிரோதமானது என கூறியிருக்கிறார். இந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் ஆர்.எஸ்.பி. குழுமங்களுக்கு சொந்தமான 7 கல்வி நிறுவனங்களும் இழுத்து மூடப்படும் என்றும் சுக்லா கூறியிருக்கிறார்.
Recommended Video
காஷ்மீர் மாணவர் சங்கம் கோரிக்கை
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் 3 மாணவர்கள் மீதான கைது நடவடிக்கையை கைவிட வேண்டும்; அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்; இது 3 மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். 3 மாணவர்களும் எழுத்துப்பூர்வமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டிருந்தால் கூட தண்டிக்கலாம் என ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
2 பேர் கைது
இதேபோல் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து உ.பி.யில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசதுரோக சட்டம் பாயும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து 7 பேர் மீதும் தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு சேர்க்கப்பட்டுள்ளன.