தேர்தல்: முதலில் சிலிண்டர் எண்ணிக்கை அதிகரிப்பு, தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அகவிலைப்படி 10 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் மானிய விலையிலான கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 9ல் இருந்து 12 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடுத்த மாதம் 10 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது. இதனால் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.
இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அகவிலைப்படி உயர்வு இந்த ஆண்டு 10 சதவிகிதத்திற்கு குறைவாக இருக்காது. அகவிலைப்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இது குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படலாம். முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அது கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேது முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து தற்போது இரண்டாவது முறையாக இரண்டு இலக்கத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு 100 சதவிகிதத்தை அடைந்ததும் ஊழியர்களின் ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்படும். அதாவது அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து புதிய ஊதிய விகிதம் அமைக்கப்படும்.
தற்போது அகவிலைப்படி உயர்வு 50 சதவிகிதத்தை தாண்டியதும் அதை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கின்றனர் என்றார்.
மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு வரும் 12ம் தேதி முதல் 2 நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications