சென்னை வெள்ளத்தை தமிழக அரசு தடுத்திருக்க முடியும்.. மத்திய குழு பரபரப்பு அறிக்கை
டெல்லி: சென்னையில் பெரும் பாதிப்பையும், சேதத்தையும் ஏற்படுத்திய பெரு வெள்ளத்தை தமிழக அரசு தடுத்திருக்கலாம், தவிர்த்திருக்கலாம் என்று மத்திய அரசின் புவி அறிவியல் துறையின் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
ஆனால் இதுதொடர்பாக தமிழக அரசு மெத்தனமாக இருந்ததால்தான் சேதம் மிகப் பெரிய அளவில் அமைந்து விட்டதாகவும் அது சுட்டிக் காட்டியுள்ளது. தமிழக அரசு வெள்ள விவகாரத்தில் வேகம் காட்டவில்லை என்றும் அது ஆதங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெள்ள சேதத்திற்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விடுவதில் தமிழக அரசு மிகுந்த அலட்சியம் காட்டியதாக, தாமதம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த ஆய்வறிக்கை அதற்கு வலு சேர்ப்பது போல வந்து சேர்ந்துள்ளது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகம்
மத்திய அரசின் புவி அறிவியல் துறையானது ஒரு ஆய்வை நடத்தி அதன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. சென்னை வெள்ளம் தொடர்பான ஆய்வறிக்கை இது. அந்த அறிக்கையில் காணப்படும் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் தமிழக அரசை அது குற்றம் சாட்டுவது போல உள்ளது.
மோசமான வடிகால்கள்
சென்னை நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வடிகால் மிகவும் மோசமாக உள்ளது. ஏரிகளிலிருந்து தண்ணீர் செல்லும் போக்குக் கால்வாய்கள் முறையாக இல்லை.
கூடுதல் மழை மட்டும் காரணமல்ல
சென்னையில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட கூடுதல் மழை மட்டும் காரணம் அல்ல. வடிகால்கள் சரியாக இல்லாததும், ஏரிகளிலிருந்து அதிக அளவிலான தண்ணீர் வெளியேறியதுமே முக்கியக் காரணம்.
எச்சரிக்கை விடுத்தும்
தமிழகத்தில் மிகப் பெரியஅளவில் மழை பெய்யும் என்று மாநில அரசுக்கு புவி அறிவியல் துறையும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அது சரிவர எடுத்துக் கொள்ளப்படவில்லை.
உரிய முறையில் செயல்பட்டிருந்தால்
குஜராத், ஒடிஷாவுக்கும் முன்பு இதுபோல எச்சரிக்கை விடுத்தபோது அவர்கள் துரிதமாக செயல்பட்டனர். அதேபோல தமிழக அரசும் செயல்பட்டிருந்தால் இந்த பெரும் சேதத்தை தவிர்த்திருக்கலாம்.
தவிர்த்திருக்கலாம்
ஏற்கனவே பெய்த மழையால் மக்கள் நீரில் தவித்த நிலையில் கூடுதலாக வந்த ஏரி நீரும் சேர்ந்து மக்களை பெரும் தவிப்புக்குள்ளாக்கி விட்டன. ஆனால் இந்த நிலையைத் தடுத்திருக்கலாம் என்று புவி அறிவியல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செம்பரம்பாக்கம் தவறு
மேலும் அவர்கள் கூறுகையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்பட்டது குறித்தும் தங்களது அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
111 சதவீத அதிக மழை பெய்யும் என எச்சரித்தோம்
ஆய்வுக்குழுவில் இடம் பெற்ற அதிகாரிகள் மேலும் கூறுகையில், சென்னையில் 111 சதவீதம் அளவுக்கு கூடுதல் மழை பெய்யும் என நாங்கள் எதிர்பார்த்தோம். அரசையும் எச்சரித்திருந்தோம். ஆனால் அது கண்டு கொள்ளப்படாமல் போய் விட்டது.
48 மணி நேரத்திற்கு முன்பே கூறியும்
நாங்கள் 48 மணி நேரத்திற்கான முன்கூட்டிய கணிப்பைக் கூறியிருந்தோம். எனவே தமிழக அரசு நினைத்திருந்தால் உரிய முறையில் தயாராகியிருக்க முடியும். பெரும் சேதத்தையும் தவிர்த்திருக்க முடியும் என்றனர்.