டெல்லி காங். தலைமை அலுவலகத்தை அக்டோபருக்குள் காலி செய்ய மத்திய அரசு கெடு!
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை அக்டோபருக்குள் காலி செய்ய மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை அக்டோபருக்குள் காலி செய்ய கெடு விதித்து மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி அக்பர் சாலையில் 24-ம் எண் பங்களாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 1978-ம் ஆண்டு முதல் இந்த முகவரியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.

உரிமங்களை மீண்டும் புதுப்பித்தலின் அடிப்படையில் தொடர்ந்து வாடகை செலுத்க்தி இந்த இடத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வந்தது. 2010-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் கட்டுவதற்கு ரவுஸ் அவென்யூ பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனால் அக்பர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி காலி செய்ய மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ரவுஸ் அவென்யூ பகுதியில் கட்டுமானத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை என கூறி காலி செய்ய கால நீட்டிப்பு கேட்டது காங்கிரஸ்.
இந்நிலையில் வரும் அக்டோபருக்குள் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல் 26, அக்பர் சாலையில் இயங்கி வரும் காங்கிரஸ் கட்சியின் சேவாதளம் அலுவலகம், 5, ரெய்சினா சாலையில் இயங்கும் இளைஞர் காங்கிரஸ் அலுவலகம், சாணக்யபுரி குடியிருப்பு ஆகியவற்றையும் காங்கிரஸ் கட்சி காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications