ஆந்திரா சட்டசபையை கலைக்க மத்திய அரசு பரிந்துரை!
டெல்லி: ஆந்திர சட்டசபையை கலைக்கவும், ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை நேற்று இரவு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா புதிய மாநிலம் உருவாக்க, கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு சீமாந்திரா பகுதியில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. காங்கிரசாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகி தனிக்கட்சியே தொடங்கினார்.
இதை தொடர்ந்து, கடந்த மார்ச் 1ம் தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், சட்டசபை கலைக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ஆட்சி பிறப்பிக்கப்பட்டு 60 நாட்களுக்குள் அதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. இதற்கான கெடு முடிய இன்னும் சில நாட்களே உள்ளது.
16வது லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகையில், நாடாளுமன்றத்தை கூட்ட முடியாது. எனவே, நாடாளுமன்ற ஒப்புதல் பெறவும் முடியாது. அதேசமயம், ஜனாதிபதி ஆட்சியை மீண்டும் அமல்படுத்துவதற்கான புதிய உத்தரவை பிறப்பித்தால், நாடாளுமன்றத்தில் அதற்கான ஒப்புதல் பெறுவதற்கு கூடுதல் கால அவகாசம் கிடைக்கும்.
அதற்குள்ளாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 16ல் வெளியாகி புதிய சட்டசபை தேர்வாகி விடும். இதனால் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமையன்று மத்திய அமைச்சரவை கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தது.
ஆந்திராவில் சட்டசபையை கலைக்கவும், ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கவும் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வது என அக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் நாடாளுமன்றத்தை கூட்டுவது இயலாத காரியம் என்பதால் இந்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்திருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications