ஜி.எஸ்.டி. மசோதாவில் மாநிலங்கள் 1% கூடுதல் வரிவிதிப்பது குறித்து ஒருமித்த கருத்து தேவை- மத்திய அரசு
டெல்லி: மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரி(Goods ans Services Tax- GST) முறையில் மாநிலங்கள் 1% கூடுதலாக வரி விதிக்கலாம் என்ற அம்சத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த 1% கூடுதல் வரி தொடர்பாக மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், மாநிலங்களிடையே கொண்டு செல்லப்படும் பொருட்கள், மாநிலங்களுக்குள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது தற்போது பல வரிவிதிப்பு முறைகள் நடைமுறையில் உள்ளன. அதாவது கலால்வரி, வாட் வரி, சுங்கவரி, சேவை வரி என பன்முக வரி விதிப்பு முறை மத்திய மற்றும் மாநில அரசுகளால் பின்பற்றப்பட்டு வருகின்றன..

இப்படியான நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு முறைக்கு முடிவு கட்டி ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டுவருவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு முயற்சிகளைத் தொடங்கியது. தற்போதைய பா.ஜ.க. அரசும் இதை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்துவதில் முனைப்பாக உள்ளது.
ஆனால் இந்த ஜி.எஸ்.டி. முறையில் விதிக்கப்படும் "ஒரே வரி"யின் சதவீதம் எவ்வளவு இருக்க வேண்டும்; கிடைக்கும் வரியில் மத்திய- மாநில அரசுகளின் பங்கீட்டு அளவு, மாநிலங்களுக்கு ஏற்படும் கடுமையான இழப்புகள், விலைவாசி உயர்வதற்கான சாத்தியங்கள் என பல அம்சங்களில் மாநிலங்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்புகளையும் பல்வேறு கருத்துகளையும் முன்வைத்து வருகின்றன. இவற்றில் மத்திய அரசும் பல திருத்தங்களை ஏற்றுக் கொண்ட போது இந்த விவகாரத்தில் இன்னமும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இந்த களேபரங்களுக்கு இடையே சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி) நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ராஜ்யசபாவில் இது நிறைவேறாமல் உள்ளது. ராஜ்யசபாவில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லை.
ஆகையால் ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவையும் மத்திய அரசு கேட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று இரவு 7 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோருடன் தேநீர் விருந்துக்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஜி.எஸ்.டி. மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றுவதற்கான ஆதரவை பிரதமர் மோடி கோர இருக்கிறார்.
இந்த ஜி.எஸ்.டி. மசோதாவில் மாநில அரசுகள் விரும்பினால் கூடுதலாக 1% வரி விதிக்கலாம் என்கிற அம்சம்தான் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆகையால் இந்த 1% கூடுதல் வரி விதிப்பு அம்சம் தொடர்பாக ஒருமித்த கருத்து உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.
மாநிலங்கள் கூடுதலாக 1% வரி விதிக்கலாம் என்ற அம்சத்துக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்தகைய 1% கூடுதல் வரிவிதிப்பால் விலை ஏற்றம் எனது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியும் இந்த 1% கூடுதல் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆகையால் இந்த 1% கூடுதல் வரி விதிப்பு அம்சம் தொடர்பாக ஒருமித்த கருத்து உருவாக்கப்பட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications