தேசத்தின் ராணுவத்தை கேவலப்படுத்திய மோகன் பகவத் மீது எப்போது பாயும் நடவடிக்கை?
தேசத்தின் ராணுவத்தை இழிவுபடுத்திய மோகன் பகவத் மீது தேசதுரோக நடவடிக்கை பாயுமா? என்பது கேள்வி.
Recommended Video

டெல்லி: இந்திய தேசத்தின் ராணுவத்தை விட தங்களது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலிமையானது என இழிவுபடுத்திப் பேசிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் இப்போது கேள்வி.
பீகாரில் பேசிய மோகன் பகவத், தேசத்தின் ராணுவ பலத்தை இழிவுபடுத்தும் வகையில், ராணுவத்தை விட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 3 நாளில் போருக்கு தயராகிவிடும் என கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது வன்முறை செயல்கள் மூலம் சிறுபான்மையினரை அன்னியப்படுத்துகிற ஒரு இயக்கம். பன்மைத்தன்மை கொண்ட இந்தியாவை இந்துக்ளுக்கான நாடாக்க வேண்டும் என்ற இந்துராஷ்டிரா கொள்கையை பேசுகிற இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ்.
இந்திய தேசம் என்பது வேற்றுமையில் ஒற்றுமையுடன் பல்வேறு மொழி, தேசிய இனங்களை கொண்ட ஒரு பெருநிலப்பரப்பு. ஆனால் இந்த நிலப்பரப்பில் இருக்கிற அத்தனை மொழிகளையும் தேசிய இனங்களையும் வன்முறை மூலமாக ஒழித்துக் கட்டி சமஸ்கிருதத்தையும் இந்தியையும் இந்த நிலப்பரப்பின் மொழிகளாக்கி, இந்து என்கிற ஒற்றை இனத்தை உருவாக்க முயலும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.

பாபர் மசூதி இடிப்பு
நாடு விடுதலை அடைந்தது தொடங்கி இன்று வரை ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் பல்வேறு முகங்கள் கொண்ட அமைப்புகளும்தான் மத மோதல்களுக்கு காரணமாக இருந்து வருகின்றன. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து நாடு முழுவதும் மதவன்முறைகளுக்கு வித்திட்டதும் இவர்கள்தான்..குஜராத் இனப்படுகொலைகளை நிகழ்த்தியதும் இவர்கள்தான்.

இப்போது முத்திரை குத்துங்கள்
இதன் அரசியல் பிரிவான பாஜக மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் அமர்ந்துவிட்டதால் தேசத்தின் ராணுவத்தை இழிவாக பேசுகிறார்கள். இதுபோன்ற கருத்தை வேறு ஒருவர் தெரிவித்திருந்தால் ஆன்ட்டி இந்தியன், தேசதுரோகி, பாகிஸ்தான் கைக்கூலி என எச். ராஜா வகையறாக்கள் வரிந்து கட்டிக் கொண்டு முத்திரை குத்தும். இல்லையெனில் அவர்கள் கிறிஸ்துவ மிஷினரிகள் என்றும் 'டேனியல்' பகவத் என்றும் பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்டிருப்பார்கள்.

தேசத்தின் ஆன்மாக்கள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசினால் எல்லையில் பனியில் காவல் காக்கிற ராணுவ வீரரைப் போல தாங்கிக் கொள்ளுங்கள் என எகத்தாளம் பேசுகிற பாஜக கோஷ்டிகள், இன்று அந்த தியாகத் திருவுருங்களை இழிவாக பேசுகிற போது துள்ளாமல் வருடுவது ஏன்? எல்லையில் கொட்டும் பனியிலும் வாட்டும் குளிரும் நம்மை காக்க போரிடும் தேசத்தின் ஆன்மாக்களை இழிவுபடுத்திய மோகன் பகவத்தை தேசத் துரோகி என முத்திரை குத்தி நடவடிக்கை எடுப்பார்களா?

எத்தனை வழக்குகள் பாயும்?
தேசிய இன பிரச்சனையை பேசினாலே தேச துரோக வழக்கு போடும் அரசுகள், தேசத்தின் ராணுவத்தையே அவமதித்து தங்களது கும்பல்தான் வலிமையானது என பேசியிருக்கும் மோகன் பகவத் மீது எத்தனை தேசதுரோக வழக்குகள் போடப் போகின்றன? இதற்கும் சப்பைகட்டு கட்டிக் கொண்டு வீண் வியாக்யானங்களைத்தான் மத்திய அரசு சொல்லப் போகிறதோ?












Click it and Unblock the Notifications