இந்திய இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதை தடுக்கும் 'ஆபரேசன் சக்கர வியூகம்'!
டெல்லி: இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதை தடுக்க, ஆபரேசன் 'சக்கர வியூகம்' என்ற நடவடிக்கையை தொடங்கிய இந்திய உளவு அமைப்பு, பல ஆயிரம் பேரை வீழ்ச்சியில் இருந்து தடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் மற்றும் அதையொட்டிய நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், தீவிரமாக வளர்ந்துள்ளது. அதன் பிரச்சாரம் இணையதளம் மூலமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது. எனவே உலகின் பல நாடுகளிலும் வசிக்கும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களும், ஐஎஸ்ஐஎஸ் மூளைச்சலவைக்கு இரையாகி, தங்களது வாழ்க்கையை தொலைத்து தீவிரவாதிகளாக மாறும் நிலை உள்ளது.

பல நாடுகளில் இருந்தும்..
இந்தியாவில் இருந்து சிலர் ஏற்கனவே தீவிரவாதிகளாகிவிட்ட நிலையில், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் இஸ்லாமிய இளைஞர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்துள்ளனர். இந்தியாவில் இருந்து மேலும் பலரும் தீவிரவாத இயக்கத்தில் சேர திட்டமிட்டிருப்பது இந்திய உளவுத்துறை கவனத்திற்கு வந்தது.

உடைக்க முடியாத சக்கர வியூகம்
இளைஞர்கள் படுகுழியில் வீழ்வதை தடுக்க முடிவு செய்தது இந்திய பாதுகாப்பு துறையும், உளவுத்துறையும். இதற்காக உருவாக்கப்பட்ட திட்டமே ஆபரேசன் சக்கர வியூகம். சக்கர வியூகம் எனப்படுவது ஒரு போர்முறை. மகாபாரதத்தில் இந்த போர்முறை குறித்த விளக்கம் உள்ளது. சக்கரவியூகம் குறித்து பயிற்சி இல்லாத வீரர்கள் உள்ளே சென்று மாட்டினால் திரும்ப வியூகத்தை உடைத்து வெளியேற முடியாது. அதேபோன்ற ஒரு, வியூகம் அமைத்து தீவிரவாத எண்ணம் கொண்டவர்களை மடக்க உளவுத்துறை திட்டமிட்டதால், அதற்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.

போலி அக்கவுண்ட்
'ஆபரேசன் சக்கரவியூகம்' என்பது இதுதான்: டிவிட்டர் உள்ளிட்ட இணையதளம் வாயிலாகவே இளைஞர்களை தீவிரவாதிகளின் பிரதிநிதிகள் தொடர்பு கொண்டு தங்கள் அமைப்புக்கு ஆள் சேர்க்கிறார்கள். இதை புரிந்து கொண்ட உளவுத்துறை, தீவிரவாதிகளின் முகவர்கள் போல, போலியான பெயர்களில் இணையதளங்களில் இயங்க ஆட்களை நியமித்தது.

கணினி திரையில் விவரம்
அந்த நபர்கள், தீவிரவாதிகளாக மாற விரும்பும் இளைஞர்களை வலைபோட்டு பிடித்து பேச்சுக் கொடுப்பார்கள். இந்த இளைஞர்களும், ஈராக் செல்ல உதவுமாறு உளவுத்துறை நபர்களிடமே கேட்பார்கள். உளவு துறையினரும், உதவி செய்வதாக கூறி, நைசாக பேச்சுக் கொடுத்து, இளைஞர்கள் குறித்த விவரங்களை கேட்டறிவார்கள். இதன்மூலம், தீவிரவாத எண்ணம் கொண்டோர் யார், யார், அவர்கள் எங்கெங்கு உள்ளனர், அவர்களுடன் நெருக்கம் காட்டுவோர் யார் என்ற அனைத்து விவரங்களும் உளவுத்துறையின் உள்ளங்கைகளுக்குள் வந்துவிட்டன.

கண்காணிப்பில் உள்ளனர்..
உளவுத்துறை அதிகாரி ஒருவர் 'ஒன்இந்தியாவிடம்' இதுகுறித்து கூறுகையில், உளவுத்துறையிடம் இணையதளங்களில் சிக்கிய நபர்களை 24 மணிநேரமும் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இளைஞர்கள் வெளிநாடு தப்பிச் செல்வது தடுக்கப்பட்டுவருகிறது. அதே நேரம், குற்றம் இழைக்கவில்லை என்பதால் அந்த இளைஞர்களை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை. ஒருவேளை வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றால் கைதுக்கு ரெடியாக உள்ளோம்.

குழப்பத்தால் மளமள சரிவு
கடந்த செப்டம்பர் மாதவாக்கில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஆர்வமாக இருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 140 ஆக குறைக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையும் போலி அக்கவுண்டுகள் மூலம் பின்தொடர்வது தெரியவந்துள்ளதால், தீவிரவாத எண்ணம் கொண்ட இந்திய இளைஞர்கள் குழப்பமடைய தொடங்கியுள்ளனர். தாங்கள் உரையாடுவது, தீவிரவாதிகளுடனா, அல்லது பாதுகாப்பு அதிகாரிகளுடனா என்ற குழப்பமே அவர்களை, மேற்கொண்டு தப்பு செய்யவிடாமல் தடுத்து வைத்துக் கொண்டுள்ளது. இதுதான் நமது நாட்டுக்கு தேவை. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications