தே.ஜ. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை குறிவைக்கும் சந்திரபாபு நாயுடு?
டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை குறிவைத்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு காய்களை நகர்த்துவதாக கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைவதில் முனைப்பு காட்டி வருகிறார் சந்திரபாபு நாயுடு. இதன் எதிரொலியாகவே பாஜக தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடுகளில் தலையை காட்டி வருகிறார்.

அண்மையில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் பதவியேற்ற நிகழ்ச்சியிலும் கூட சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அவரைப் பொறுத்தவரையில் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை தம் வசமாக்கிக் கொள்வதில்தான் விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிவதால், தெலுங்குதேசம் கட்சி 2 மாநிலங்களிலும் செயல்பட இருக்கிறது. இதனால் தெலுங்குதேசம் கட்சியின் தேசிய தலைவராகும் நிலை சந்திரபாபுவுக்கு உருவாகியுள்ளது. இதனால் தேசிய அரசியலில் வலுவாக காலூன்றிக் கொள்ள நாயுடுவும் விரும்புகிறாராம்.
வரும் லோக்சபா தேர்தலில் தமது வெற்றியை உறுதி செய்யக் கூடிய தொகுதியையும் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்து வருகிறார். இந்த காய்நகர்த்தலுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தவர் சரத் யாதவ். ஐக்கிய ஜனதா தளம் அக்கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் தாம் அந்த பொறுப்புக்கு வர வேண்டும் என்பதற்கான லாபியையும் நாயுடு மேற்கொண்டு வருகிறாராம்.












Click it and Unblock the Notifications