பாஜக அணியில் எதியூரப்பா, வைகோவைத் தொடர்ந்து இணைகிறார் சந்திரபாபு!
டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் கட்சி இணைவது உறுதியாகி இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா நீண்டகாலமாக இருந்து வருகிறது. 17 ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் சில மாதங்களுக்கு முன்பு வெளியேறியது.

அகாலி தளம்
இதைத் தொடர்ந்து மாநிலக் கட்சிகளில் பஞ்சாபின் சிரோன்மனி அகாலி தளம் மட்டுமே பாஜக அணியில் இருந்து வருகிறது. இந்நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது பாஜக.

கர்நாடகா ஜனதா
இதற்கு பலன் கிடைத்தது போல கர்நாடகாவில் பாஜகவில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கிய எதியூரப்பாவின் கர்நாடகா ஜனதா கட்சி, தேசிய ஜனநாயககக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது.

மதிமுக
அத்துடன் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி சிறப்பாக செயல்பட்டதாக தொடர்ந்து வாஜ்பாயை பாராட்டிப் பேசி வருகிறார் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இடம்பெற்றிருந்தது.
அனேகமாக வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மதிமுக திரும்பும் என்றே தெரிகிறது.

மோடி- நாயுடு
இந்நிலையில்தான் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடன் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இணைந்து கலந்து கொண்டார். அத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கால ஆட்சியைப் பாராட்டிப் பேசினார். நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளினார்.

தெலுங்கானாவில் பின்னடைவு
ஆந்திராவைப் பொறுத்தவரையில் தெலுங்கானா பிரிக்கப்பட்டதால் தெலுங்கானா பகுதியில் தெலுங்குதேசம் பெரும் பின்னடவை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு பாரதிய ஜனதாவுக்கு கணிசமான ஆதரவு இருக்கிறது. தமக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவை பாஜகவுடனான கூட்டணி வைப்பதன் மூலம் சமன் செய்ய முடியும் என்று சந்திரபாபு கருதலாம்.

அமைச்சரவையில் இடம்?
அத்துடன் லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தால் எப்படியும் அமைச்சரவையில் இடம் கிடைப்பதன் மூலம் தொடர்ந்தும் தங்களது செல்வாக்கை தக்க வைக்க முடியும் என்றும் கருதியிருக்கலாம். இதனாலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபுவின் தெலுங்குதேசம் இணைய முடிவு செய்திருக்கலாம்.

ஒருங்கிணைப்பாளர் பதவி
மேலும் கூட்டணியில் இணைந்தால் காலியாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு சந்திரபாபுவுக்கு வழங்கப்படும் என்று பாஜக தரப்பில் உறுதியும் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விரிவடையும் அணி
ஆக தமிழகத்தில் மதிமுக, ஆந்திராவில் தெலுங்குதேசம், கர்நாடகாவில் கர்நாடகா ஜனதா, மகாராஷ்டிராவில் சிவசேனா, பஞ்சாபில் அகாலி தளம் என பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி விரிவடைந்து வருகிறது என்பது மிகையல்ல என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications