கூலிங் கிளாஸுடன் மோடிக்கு கை கொடுத்த கலெக்டர்.. நோட்டீஸ் விட்ட சட்டிஸ்கர் அரசு!
ராய்ப்பூர்: விதிகளுக்குப் புறம்பாக கூலிங் கிளாஸ் போட்டும், சாதாரண உடை அணிந்தும் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த சட்டிஸ்கர் கலெக்டருக்கு மாநில அரசு நோட்டீஸ் விட்டு எச்சரித்துள்ளது.
அந்த கலெக்டரின் பெயர் அமீத் கட்டாரியா. பஸ்தார் மாவட்ட கலெக்டர் ஆவார்.
பிரதமர் மோடி மே 9ம் தேதி பஸ்தாருக்கு வந்திருந்தார். அவரை முதல்வர் ரமன் சிங், காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் அமீத் கட்டாரியா உள்ளிட்டோர் வரவேற்றனர். அதிகாரிகளை முதல்வர் ரமன் சிங் அறிமுகப்படுத்தினார்.

அப்போது கலெக்டர் அமீத் கட்டாரியா, பிரதமருக்கு கை குலுக்கினார். அவரைப் பார்த்த பிரதமர், வாங்க "தபாங்" கலெக்டர் நல்லாயிருக்கீங்களா என்று சிரித்தபடி கேட்டார்.
இந்த செய்தி பரபரப்பைக் கிளப்பியது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான விதிமுறைகளுக்குப் புறம்பாக டிரஸ் அணிந்திருந்ததாலும், கூலிங் கிளாஸ் போட்டிருந்ததாலும்தான் மோடி அவ்வாறு கூறியதாக சர்ச்சை கிளம்பியது.
இந்த நிலையில் இதுபோல இனி நடக்கக் கூடாது என்று எச்சரித்து அமீத் கட்டாரியாவுக்கு மாநில அரசு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், நீங்கள் பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியின்போது வழக்கத்திற்கு மாறாக, சாதாரண உடையிலும், கூலிங் கிளாஸ் அணிந்தும் வந்திருந்தீர்கள்.
உங்களது நடத்தையானது, அகில இந்திய சர்வீஸ் விதிமுறை 3 (1)ன் கீழ் விதி மீறலாகும். எனவே பணி விதிகளை முறையாக கடைப்பிடித்து அதற்கு இழுக்கு வராமல் நடக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
இனிமேல் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் தாங்கள் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறீர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் ரமன் சிங் கூறுகையில், வெறும் எச்சரிக்கை மட்டும்தான் தரப்பட்டுள்ளது. அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாது என்றார்.
கலெக்டருக்கு தில் ஜாஸ்தி
ஆனால் கலெக்டர் இதைக் கண்டு பயந்தது போலத் தெரியவில்லை. தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து இந்தப் படத்தைப் பத்திரமாக வைத்துள்ளார். நீக்காமல் விட்டுள்ளார். ஏன், புரபைல் படமே இந்தப் படம்தான்!
"ஒஸ்தி" கலெக்டர்தான்!!












Click it and Unblock the Notifications