இந்திய சந்தையை ஆக்கிரமிக்க வருகிறது அமெரிக்க சிக்கன்.. லெக் பீஸ் ரேட் குறைய வாய்ப்பு
டெல்லி: விரைவிலேயே அமெரிக்காவிலிருந்து குறைந்த விலை சிக்கன், இந்தியாவுக்கு இறக்குமதியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகில் அதிக அளவு சிக்கன், ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலுள்ளது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்காவிலிருந்து வரும் சிக்கன்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. பறவை காய்ச்சல் காரணமாக, இந்தியா இத்தடையை செய்திருந்தது.

இறக்குமதி தடை
அதேநேரம், உலக வர்த்தக அமைப்பில், அமெரிக்கா இதை எதிர்த்து குரல் கொடுத்தது. எனவே, வர்த்தக அமைப்பும், அமெரிக்காவின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கூறியுள்ளது. தடையை நீடிக்க கூடாது என்று கூறியுள்ளது. இதையடுத்து, இந்தியாவிலுள்ள இறக்குமதியாளர்கள், அமெரிக்க சிக்கன் ஏற்றுமதியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளனர்.

லெக் பீஸ்கள்
இந்தியா தனது தடையை விலக்கினால், அமெரிக்காவில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 300 மில்லியன் டாலர் அளவுக்கு சிக்கன் அதிலும் குறிப்பாக லெக் பீஸ்கள் இறக்குமதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

விலை குறையும்
அதேநேரம், இந்திய கோழிப்பண்ணையாளர்கள், மனதில், இந்த தடை நீக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு கிலோ சிக்கன் லெக் பீஸ் சராசரியாக ரூ.250க்கு விற்பனையாகிறது. அமெரிக்காவில் இருந்து லெக் பீஸ்கள் வந்தால், அதைவிட பாதி விலைதான் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்திய சிக்கன் சந்தையில் சுமார் 15 சதவீத பங்குகளை அமெரிக்க சிக்கன்கள் கைப்பற்றும் என்று கூறுகிறார், இந்திய பண்ணைக்கோழி உற்பத்தியாளர் சம்மேளன தலைவர் ஜக்பிர் சிங்.

சிக்கன் நுகர்வு
உலக அளவில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு மனிதனின் சிக்கன் உண்ணும் விகிதம் 15 முதல் 18 கிலோவாக உள்ளது. அது, இந்தியாவில் 4 கிலோவாகத்தான் இருக்கிறதாம். இருப்பினும் இந்த தலா நபர் சிக்கன் நுகர்வு வருங்காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே சந்தையை விரிவுபடுத்த அமெரிக்க நிறுவனங்கள் தயாராகியுள்ளன.












Click it and Unblock the Notifications