ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு... நாடு முழுவதும் 14ம் தேதி மருந்து கடைகள் ஸ்டிரைக்
மும்பை: அகில இந்திய மருந்துக் கடைக்காரர்கள் கூட்டமைப்பு வரும் 14ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமைப்பில் சுமார் 7 லட்சம் மருந்துக் கடைக்காரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
மற்ற பொருட்களைப் போலவே தற்போது மருந்துப் பொருட்களும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப் படுகின்றன. இதனால் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே தேவையான மருந்துக்களை மக்கள் வாங்க இயலுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து கடைக்காரர்களின் உயரிய அமைப்பான அகில இந்திய மருந்து கடைக்காரர்கள் கூட்டமைப்பு, வருகிற 14-ந் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தற்போது இந்த அமைப்பில், சுமார் 7 லட்சம் மருந்து கடைக்காரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
வேலை நிறுத்தம் குறித்து இந்த கூட்டமைப்பின் தலைவர் ஜே.எஸ்.ஷிண்டே கூறுகையில், "மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பதற்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தை நாங்கள் நடத்த இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்ற நாடுகளில் இவ்வாறு ஆன்லைனில் மருந்துகள் விற்கப்படுவதால் ஏற்பட்ட தீமைகளை ஆராய்ந்தே நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்கிறார் ஷிண்டே.
சமீபத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை மும்பை, தானே மற்றும் புனேயில் 27 ஆன்லைன் மருந்தகத்தில் நடத்திய அதிரடி சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.