சென்னை-பெங்களூர் பயணிகளை ஒசூரில் இறக்கிவிட்டு அட்டகாசம் செய்த ஆம்னி பஸ்கள் !

பெங்களூரில் வேலை பார்க்கும் தமிழர்கள் தசரா விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு இன்று பெங்களூர் திரும்பினர். சென்னையில் இருந்தும் பெங்களூருக்கு நேற்றிரவு பல்லாயிரம் பேர் திரும்பினர்.
சென்னையில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பல ஆம்னி பஸ்களும் இன்று அதிகாலை ஒசூரை தாண்டி, கர்நாடக எல்லைக்குள் நுழைந்ததன. அப்போது வாகன தணிக்கை செய்யும் பகுதியில், அந்த பஸ்களுக்கு கர்நாடகாவில் நுழையும் உரிமம் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து பஸ்களை, கர்நாடகாவிற்குள் நுழைய ஆர்.டி.ஓ அதிகாரிகள் தடை விதித்துவிட்டனர். எனவே பஸ்களை ஒசூர்-பெங்களூர் நடுவே நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்திய டிரைவர்கள், பயணிகளை கீழே இறங்கி, தனியார் டவுன் பஸ்சில் பெங்களூருக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் பெர்மிட் இல்லாததால் பெங்களூருக்குள் செல்ல முடியாது என்று டிரைவர்கள் கறாராக கூறிவிட்டனர்.
இதுகுறித்து ஸ்லீப்பர் கோச் பஸ் ஒன்றில் பயணித்த பிராங்களின் என்பவர் கூறுகையில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.1100 என்ற அநியாய கட்டணம் கொடுத்து இந்த பஸ்சில் பயணித்து வந்தோம். திடீரென கீழே இறக்கி லோக்கல் பஸ்சில் பெங்களூர் போகச்சொல்கிறார்கள். நாங்கள் லோக்கல் பஸ்சுக்காக காத்திருக்கும் நேரத்தில் மேலும் சுமார் 15 ஆம்னி பஸ்கள் இதேபோல நடுவழியில் பயணிகளை இறக்கியதை பார்த்தோம். வயதானவர்கள், குழந்தைகளுடன் இந்த குளிரில் பெங்களூர் போய் சேருவது பெரும் சிரமம் என்றார்.
கிரிஷ் என்ற ஆம்னி பஸ்சில் பயணித்த ஷர்மிளா என்ற பெண் பயணி கூறுகையில், டிக்கெட்கூஸ் என்ற பிரபல வெப்சைட்டில்தான் இந்த பஸ்சை புக் செய்தோம். பிரபல வெப்சைட்டுகள் இதுபோன்ற பஸ்களை ஏன் அனுமதிக்கின்றன என்று தெரியவில்லை என்றார் வேதனையுடன். இதன்பிறகு லோக்கல் பஸ்சில் பயணிகள் பெங்களூர் சென்று சேர்ந்தனர். கூட்டமில்லாத லோக்கல் பஸ்சுக்காக 3 மணி நேரம் வரை காத்திருக்க நேர்ந்ததாக பயணிகள் புலம்பியபடி சென்றனர்.
தசரா விடுமுறை, வீக் என்ட் போன்ற காரணங்களால் கூடுதல் பஸ்களை இயக்கி லாபம் பார்க்க ஆசைப்பட்ட சில ஆம்னி பஸ் நிர்வாகத்தினர், கர்நாடகாவிற்குள் செல்ல பெர்மிட் இல்லாத வண்டிகளையும் இயக்கியதால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இனியாவது இதுபோல ஆம்னி பஸ்கள் அடாவடி செய்யாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகள் கோரிக்கை.












Click it and Unblock the Notifications