கர்நாடக வனப்பகுதியில் வழிதெரியாமல் சிக்கிய சென்னை இன்ஃபோசிஸ் ஊழியர் பத்திரமாக மீட்பு
பெங்களூர்: கர்நாடக காட்டுக்குள் வழிதவறி சுற்றிய சென்னையை சேர்ந்த இன்ஃபோசிஸ் ஊழியர் 4 நாட்களுக்கு பிறகு திரில் அனுபவங்களை சந்தித்து பத்திரமாக மீண்டு வந்தார்.
சென்னை மகிந்திரா சிட்டி பெசிலிட்டியிலுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர் ஸ்ரீகாந்த் பாலாஜி (24). நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த டிரெக்கிங் கிளப் மூலமாக, இவரும் நண்பர்களுமாக மொத்தம் 14 பேர் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் டிரெக்கிங் செல்ல வந்தனர்.

கால் வலியால் விபரீதம்
கடந்த சனிக்கிழமை ஹாசன் மாவட்டம் சக்லேஸ்பூர் பகுதியிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைக்குள் இக்குழு புகுந்தது. இந்நிலையில் ஸ்ரீகாந்த் பாலாஜி கால் வலி காரணமாக சற்று நேரம் இளைப்பாறியுள்ளார். மீண்டும் அவர் நடையை தொடர்ந்தபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நண்பர்களை காணவில்லை.

காட்டில் சிக்கினார்
சத்தம் போட்டு கூப்பிட்டு பார்த்தும் நண்பர்கள் யாரும் பதில் கொடுக்கவில்லையாம். காட்டில் பலமாக வீசிய காற்றின் ஓசையில் ஸ்ரீகாந்த் குரல் அடங்கிவிட்டது. இதனால் அதிர்ச்சியான ஸ்ரீகாந்த் மீண்டும் சக்லேஸ்பூருக்கு திரும்பிவிட திட்டமிட்டுள்ளார். ஆனால் காட்டில் வழி தெரியாமல் விழித்தார்.

போனில் சார்ஜ் இல்லை
அப்போதுதான் தனது கையில் வைத்திருந்த ஸ்மார்ட்போன் நினைவுக்குவரவே ஜிபிஎஸ் மூலமாக செல்ல வேண்டிய இடத்தை அறிந்துகொள்ள முயன்றுள்ளார். ஆனால் பேட்டரியில் சார்ஜ் இல்லாத காரணத்தால் போன்-ஆப் ஆகியிருந்தது. காட்டில் திசை தெரியாமல் அலைவது ஆபத்து என்பதை உணர்ந்த ஸ்ரீகாந்த் அங்கேயே மரத்தடியில் தங்கியுள்ளார்.

வன விலங்குகள் மத்தியில்..
அப்போது, பல வன விலங்குகள் அவரை கடந்து அவ்வப்போது சென்றுள்ளன. சத்தம் போடாமல் அமைதியாக இருந்தபடி வனவிலங்குகள் தன்னை தாக்கிவிடாதபடி மரத்தின்கீழே மறைந்து கிடந்து உயிர் தப்பியுள்ளார் ஸ்ரீகாந்த். காட்டுக்குள் வரும்போது நெடுஞ்சாலையை கடந்து வந்ததை நினைவுபடுத்தி கொண்ட ஸ்ரீகாந்த் அதை நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளார்.

சாப்பாடு கொடுத்த கிராம மக்கள்
சனிக்கிழமை காலை காட்டில் மாயமான ஸ்ரீகாந்த், செவ்வாய்க்கிழமைதான் நெடுஞ்சாலையை கண்டுபிடித்துள்ளார். இதன்பிறகு சாலையோரமாக நடந்து சென்று அங்குள்ள ஒரு கிராமத்தில் நடந்த விவரத்தை கூறியுள்ளார். அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் ஸ்ரீகாந்த்துக்கு சாப்பாடு, தண்ணீர் கொடுத்து உபசரித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

கண்ணை மறைத்த பனி
போலீசார் வந்து ஸ்ரீகாந்த்திடம் அவரது தந்தை எம்ஜிஆர்.அமரன் என்பவரின் செல்போன் எண்ணை கேட்டு தெரிந்துகொண்டு அவரை சக்லேஸ்பூர் வரவழைத்தனர். காட்டுக்குள் நடந்து கால் வீங்கத்துடனும், களைப்புடனும் காணப்பட்ட ஸ்ரீகாந்த் தந்தையை கட்டிப்பிடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார். இதுகுறித்து நிருபர்களிடம் ஸ்ரீகாந்த் கூறுகையில், "சுற்றிலும் யார் இருக்கிறார்கள் என்பதையே கண்டுபிடிக்க முடியாதபடி பனி சூழ்ந்த ஒரு பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை, ராஜநாகம் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் இடத்தில் இருந்ததை நினைத்தாலே புல்லரிக்கிறது" என்றார்.

வனத்துறை வழக்குப்பதிவு
இதனிடையே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் முன் அனுமதியின்றி நுழைந்ததற்காக சென்னையை சேர்ந்த 14 டிரெக்கிங் நபர்கள் மீதும் கர்நாடக வனத்துறை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் மீதும் இதேபோன்ற குற்றத்துக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications