சசி, இளவரசியிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை...கிரின் சிக்னல் தந்தது கர்நாடகா!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த கர்நாடக சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது.
பெங்களூர் : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்த கர்நாடக சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது.
கடந்த 9ம் தேதி சசிகலா குடும்பத்தினர் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை 5 நாட்கள் வரை நீடித்த நிலையில் ரூ.1,430 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இந்த வருமான வரி சோதனையின் போது ரூ.7 கோடி பணம் மற்றும் ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. மேலும் போயஸ் கார்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சோதனையில் சசிகலாவின் 4 அறைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது சசிகலா அறையில் இருந்த லேப்டாப் மற்றும் ஏராளமான பென்டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மீதான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன, தேவைப்பட்டால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறி இருந்தது.
இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு கர்நாடக சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் வருமான வரி அதிகாரிகள் நாளை சிறைக்கு சென்று சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரைணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.