மகாதேவ் சூதாட்ட ஆப்- ரூ508 கோடி வாங்கிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்-அமலாக்கத்துறை பகீர்!
ராய்ப்பூர்: மகாதேவ் சூதாட்ட ஆப் (செயலி) உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் (காங்கிரஸ்) ரூ508 கோடி பணம் பெற்றார் என அமலாக்கத்துறை திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். பாஜகவைப் பொறுத்தவரையில் கணிசமான இடங்களைப் பெற்றாலும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்பதும் கருத்து கணிப்புகளின் முடிவுகள்.

இந்நிலையில் வட இந்தியாவில் பிரபலமான மகாதேவ் சூதாட்ட செயலி மீதான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை அதிரடியாக மேற்கொண்டது. இந்த சோதனைகளின் போது கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான கார் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் ரூ5.86 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. சத்தீஸ்கர் மாநில தேர்தல் செலவுகளுக்காக முதல்வர் பூகேஷ் பாகலிடம் கொடுக்க வைத்திருந்த பணம் இது எனவும் சிக்கிய ஆசிம் தாஸ் என்பவர் வாக்குமூலம் கொடுத்ததாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் மாநில தேர்தல் செலவுகளுக்காக ரூ508.6 கோடி பணம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கரில் சிக்கிய ஆசிம் தாஸின் செல்போனில் பதிவாகி இருந்த இ மெயில்களை அமலாக்கத்துறை சோதனையிட்டது. இதில் மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் முக்கிய குற்றவாளியான சுபம் சோனி அனுப்பிய மெயில்கள் மூலம் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு மொத்தம் ரூ508.6 கோடி பணம் கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சத்தீஸ்கர் போலீஸ் கான்ஸ்டபிள் பீம் யாதவ் என்பவரையும் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்த விசாரணைகளின் போது பீம் யாதவ், கடந்த 3 ஆண்டுகளில் அரசின் அனுமதி இல்லாமல் துபாய்க்கு பல முறை சென்றதும் அங்கு மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்கள் ரவி உப்பால், சவுரப் சந்திரசேகர் ஆகியோரை சந்தித்ததாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பீம் யாதவின் பயண செலவுகள் அனைத்தும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விசாரணையின் போது சத்தீஸ்கர் மாநில காவல்துறை உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்காக லஞ்சப் பணத்தை தாம் பெற்றதாகவும் பீம் யாதவ், ராய்ப்பூர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார் என்கின்றன அமலாக்கத்துறை வட்டாரங்கள்.
ஏற்கனவே மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். இந்த வரிசையில் தற்போது அமலாக்கத்துறை வளையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் வளைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications