ஒரு காலத்தில் பாஜகவின் கோட்டை! ஆனா இப்போது காங்கிரஸ் கையில்! சத்தீஸ்கரில் மட்டும் 2 கட்ட தேர்தல் ஏன்
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் தேர்தலுக்கு ரெடியாகி வரும் நிலையில், அந்த மாநிலத்தின் அரசியல் சூழல் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை நவ. 7 மற்றும் 17 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் வரும் டிச. 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில் மற்ற மாநிலங்களில் இருந்து சத்தீஸ்கர் சற்றே தனித்துவமானது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சத்தீஸ்கர்: இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு முக்கிய காரணமே இங்கு நிலவும் மாவோயிஸ்ட் பிரச்சினைதான். பல ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் பல இடங்களில் மாவோயிஸ்ட் பிரச்சினை என்பது தொடர்கதையாக இருக்கிறது. இதன் காரணமாகவே அத்தனை கனிம வளங்கள் கொட்டி கிடந்தாலும் சத்தீஸ்கர் மாநிலத்தால் மற்ற மாநிலங்களைப் போல வளர முடியவில்லை.
சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை, அது கடந்த 2000ஆம் ஆண்டில் தான் புதிய மாநிலமாக உதயமானது. அதற்கு முன்பு வரை அது மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. சத்தீஸ்கர் தனி மாநில கோரிக்கை 1950களில் இருந்தே வந்தாலும் அது தனி மாநிலமாகவில்லை. பல ஆண்டுகள் அங்குள்ள மக்கள் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தி வந்தனர். இறுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு அப்போதைய என்டிஏ அரசு சத்தீஸ்கரைத் தனி மாநிலமாகப் பிரித்தது.
பாஜக: அதைத் தொடர்ந்து 2003இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரிய வெற்றி கிடைத்தது. அங்குச் சட்டசபையில் மொத்தம் 90 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், அதில் 50 இடங்களில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 38இல் மட்டுமே வென்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் அங்கு ராமன் சிங் தலைமையிலான பாஜகவே ஆட்சியில் இருந்தது.
கடந்த 2008 மற்றும் 2013 சர்வேக்களில் தேர்த்ல் முடிவுகள் நெருக்கமாக இருந்தது. அப்போது இரு கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 1 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இருந்த போதிலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை காங்கிரஸ் கட்சியால் ஆட்சியில் இருந்து அகற்ற முடியவில்லை. இந்த நிலை கடந்த 2018 சட்டசபைத் தேர்தலில் மாறியது.
காங்கிரஸ்: அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. 90 இடங்களில் 68 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றியது. அதன் வாக்கு வங்கியும் 43 சதவீதமாக அதிகரித்தது. மறுபுறம் பாஜகவைப் பொறுத்தவரை அவர்களால் 33 சதவீத வாக்குகளைப் பெற்று வெறும் 15 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது எட்டு சதவீத வாக்குகளை இழந்த பாஜக, 34 தொகுதிகளிலும் கோட்டைவிட்டது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ், பாஜகவைத் தவிரப் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஓரளவு செல்வாக்கு இருக்கவே செய்கிறது. கடந்த 2008இல் பிஎஸ்பி ஆறு சதவீத வாக்குகளைப் பெற்றது. 2013 மற்றும் 2018 தேர்தல்களிலும் கூட நான்கு சதவீத வாக்குகளைப் பெற்றது. இருப்பினும், தொகுதிகளைப் பொறுத்தவரை அவர்களால் ஓரிரு இடங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை.
சர்வேக்கள்: சத்தீஸ்கரில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இந்த முறை ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்புகள் அதிகம் என்றே சமீபத்திய சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது. டிபி லைவ் நடத்திய சர்வேபடி வரவிருக்கும் சத்தீஸ்கரில் 48-60 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜக 28-40 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல ஐஏஎன்எஸ் நடத்திய மற்றொரு சர்வே-இல் காங்கிரஸ் கட்சி 62 இடங்களிலும் பாஜக 27 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை சுமார் 3 கோடியாகும். சத்தீஸ்கரில் இன்னும் பெரியளவில் நகரமயமாக்கல் நடைபெறவில்லை. அவர்களில் 23.4 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் மட்டுமே வசித்து வருகிறார்கள்.. சுமார் 77% மக்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கிறார்கள்.
மக்கள்தொகை: மேலும், அங்குள்ள மக்களில் 34% பேர் பழங்குடியினர் (எஸ்டி), 12% பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், 50% அதிகமானோர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. அங்குச் சமவெளிப் பகுதிகளில் டெலி, சட்னாமி மற்றும் குர்மி பிரிவினர் அதிகம்.. அதேநேரம் வனப் பகுதிகள் கோண்ட், ஹல்பா, கமர்/புஜியா மற்றும் ஓரான் போன்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கிறார்கள்.
மேலும், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 93.25% பேர் இந்துக்கள். அதைத் தொடர்ந்து அங்குள்ள 2.02% பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். 1.92% பேர் கிருத்துவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். அதைத் தொடர்ந்து பௌத்தம், சீக்கியர்கள், ஜைனம் உள்ளிட்ட பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications